லாகூர்: பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கூப்பர் கனோலி, காஜா நஃபேவால் ஸ்டம்பிங் செய்யப்பட்ட விதம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இம்முடிவு நடுவர் தீர்ப்புகளின் தரம் குறித்த விவாதத்தை உருவாக்கியுள்ளது.
பாகிஸ்தான் இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 111 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 3-0 என்ற கணக்கில் தொடரை ஒயிட்வாஷ் செய்தது. ஆனால், இந்த வெற்றியையே பாதிக்கும் அளவுக்கு பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் செய்த செயல் அமைந்துள்ளது.

கனோலி, கிரீஸுக்கு திரும்பியபோது பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் காஜா நஃபேவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். கள நடுவர் மூன்றாவது நடுவரிடம் சரிபார்க்காமல், உடனடியாக அவுட் என்று தீர்ப்பளித்தார்.ஆனால், ரீப்ளே காட்சிகளில், விக்கெட் கீப்பர் காஜா, பந்து வலது கையில் இருக்க, நஃபே தனது இடது கையுறையால் ஸ்டம்ப்பைத் தகர்த்தது தெரியவந்தது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக, நடுவர் தீர்ப்பின் பிழை வெளிப்பட்டது.கிரிக்கெட் விதியின்படி, பந்தை வைத்திருக்கும் கையாலோ அல்லது கையுறையாலோ மட்டுமே விக்கெட் கீப்பர் பெய்ல்ஸை அகற்ற வேண்டும். ஆனால், நஃபே பந்தை இடது கைக்கு மாற்றாமல் ஸ்டம்ப்பை தகர்த்தார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) விதி 29.2.1 யின் படி "ஒரு பீல்டர் தனது கையிலோ அல்லது கையிலிருக்கும் பந்தாலோ பெய்ல்ஸை ஸ்டம்பிலிருந்து நீக்கினாலோ, அந்த சமயத்தில் பந்தை அந்த கையில் அல்லது கைகளில் வைத்திருக்க வேண்டும்."
விதிமீறலை கண்டுகொள்ளாத காஜா நஃபே, தனது அப்பீலை தொடர்ந்து வலியறுத்தி, அது சரியான அவுட் என நடுவரை நம்பவைத்தார். இச்சம்பவம், கிரிக்கெட்டில் நடுவர் தீர்ப்புகளின் தரம் குறித்த தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் ரசிகர்கள் பலரும், பாகிஸ்தான் புதிய புதிய முறையில் ஏமாற்றுவதாக கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக் பந்தை எறிவதாக, ஆஸ்திரேலியா குற்றம்சாட்டிய நிலையில், தற்போது இந்த ஏமாற்று சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.