ஆசியக் கோப்பை.. பிசிசிஐ அரசியல் புரிகிறது.. இடத்தை மாற்றினால் பாக். வெளியேறும்.. ரமீஸ் ராஜா ட்விஸ்ட்
கராச்சி: ஆசியக் கோப்பைத் தொடரை வேறு நாட்டிற்கு மாற்றம் செய்தால், பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற திட்டமிடப்பட்டு வருகிறது. ஆனால் இருநாட்டு அரசியல் காரணங்கள் காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தியா வரவில்லை என்றால், இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தான் வெளி நடப்பு செய்யும் என்று ரமீஸ் ராஜா போர் கொடி தூக்கினார்.

இந்தியா பதிலடி
ஆனால் இந்தியா தரப்பில் விளையாட்டு உலகில் இந்தியா முக்கியமான நாடாக விளங்குவதாகவும், இந்தியா இல்லாமல் கிரிக்கெட் உலகில் எதுவும் நடைபெறாது என்றும் கூறியது. இதனால் இந்தியாவை மிரட்டி பாகிஸ்தான் வர வைக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக பார்க்கப்பட்டது.

ஜெய் ஷா கருத்து
இதுகுறித்து ஆசிய கிரிக்கெட் சங்க செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், ஆசிய கோப்பை தொடர் இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்தில் நடத்தப்படலாம் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, உரிய பதில் அளிக்கவில்லை.

பாகிஸ்தான் வெளியேறும்
இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை நாங்கள் நியாயமான முறையில் பெற்றோம். இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறவில்லை என்றால் எங்கள் அணி தொடரை விட்டு வெளியேற வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ அரசியல்
அதேபோல் ஆசியக் கோப்பையை நடத்துவதற்கான வாய்ப்பை ஏசிசி எங்களுக்கு வழங்கியுள்ளது. பிசிசிஐ-யில் அரசியல் இருப்பதை புரிந்து கொள்கிறேன். ஆனால் பாகிஸ்தானில் இருந்து ஆசியக் கோப்பைத் தொடரை வேறு இடத்திற்கு மாற்றுவது சரியல்ல என்று ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications