மும்பை: உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணியை முதல்முறையாக வீழ்த்தி பாகிஸ்தான் அணி புதிய வரலாறு படைக்கும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கில் அதர்டன் தெரிவித்துள்ளார்.
13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டி முடிவடைந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் இந்திய அணி மோதவுள்ள போட்டிக்காக காத்திருக்கிறார்கள். குறிப்பாக அக்.14ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆர்வமாக உள்ளனர். பாகிஸ்தான் அணி வீரர்கள் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி ஒருமுறை கூட இந்திய அணியை வீழ்த்தியதில்லை. இதுவரை உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்றுள்ள 7 போட்டிகளிலும் இந்திய அணியே வென்றுள்ளது. இந்த வரலாற்றை தக்க வைக்க இந்திய அணியும், புதிய வரலாறு படைக்க பாகிஸ்தான் அணியும் களமிறங்குவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த ஆட்டம் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கும், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் இடையிலான ஆட்டமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் சில நாட்களுக்கு முன் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் பற்றி சுனில் கவாஸ்கர் பேசுகையில், இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெல்வதும் முக்கியம் என்று கூறி இருந்தார்.
தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கில் அதர்டன் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆதர்டன், இதுவரை உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி ஒருமுறை கூட வீழ்த்தியதில்லை. 7 போட்டிகளிலும் தோல்வியை தான் அடைந்துள்ளனர். ஆனால் பாகிஸ்தான் அணி இம்முறை இந்திய அணியை சர்ப்ரைஸ் செய்யும் என்று நினைக்கிறேன். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை முதல்முறையாக பாகிஸ்தான் அணி வீழ்த்தும் என்று கணித்துள்ளார்.
ஆசிய கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டியில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களிடம் இந்திய அணியின் டாப் ஆர்டர் மொத்தமாக சரிந்தது. இதனால் உலகக்கோப்பை போட்டியில் அப்படி ஏதும் நடக்குமோ என்ற ரசிகர்களிடையே பீதியை வெளிப்படுத்தி வருகின்றனர்.