சென்னை: சென்னையில் நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் - பாகிஸ்தான் மகளிர் உலகக் கோப்பை டி20 ஆட்டத்தில் பவுன்சர் பந்து தாக்கி பாகிஸ்தான் வீராங்கனை ஜவேரியா கான் காயமடைந்தார்.
மகளிருக்கான டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 4 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தின் போது பாகிஸ்தான் தொடக்க வீராங்கனை 27 வயதான ஜவேரியா கான் பந்து தாக்கி காயமடைந்தார். மேற்கு இந்தியத் தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் ஷமிலியா கானெல் பவுன்சராக வீசிய பந்து ஜவேரியா கானின் கையை பதம் பார்த்து பிறகு ஹெல்மெட்டையும் தாக்கியது.
இதில் நிலைகுலைந்து மைதானத்தில் விழுந்த அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை நடத்தியதில் அவரது கை பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
ஒரு நாள் சிகிச்சைக்கு பிறகு ஜவேரியா கான் "டிஸ்சார்ஜ்" செய்யப்பட்டார். ஆனால் காயம் சரியாகும் வரையில் அவர் விளையாட வாய்ப்பில்லை என்றும், பயணம் செய்யக் கூடாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பவுன்சர் பந்து தாக்கி ஆஸ்திரேலியாவின் பில் ஹியூக்ஸ் என்னும் இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.