இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மகளிர் அணி செய்த படுமோசமான சாதனை.. வரலாற்றிலேயே குறைந்த ஸ்கோர்
துபாய்: 2026 மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய வீராங்கனைகளின் அபார பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி வெறும் 55 ரன்களுக்கு சுருண்டது. இது சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் மகளிர் அணி பதிவு செய்த மிகக்குறைந்த ஸ்கோராகும். இதன் மூலம் அந்த அணி மோசமான சாதனையை செய்துள்ளது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. சுழலுக்குச் சாதகமான துபாய் ஆடுகளத்தை இந்திய வீராங்கனைகள் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். இந்திய அணியின் ஸ்ரீ சரணி மற்றும் பிரேமா ராவத் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். அனுபவ வீராங்கனை தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளையும், ஷபாலி வர்மா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆசிய கோப்பை வரலாற்றில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஒரே இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு 2016-ல் இலங்கைக்கு எதிராக இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. மேலும், இந்திய அணிக்கு எதிராக ஒரு அணி மிகக் குறைந்த ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன பட்டியலில் பாகிஸ்தானின் இந்த 55 ரன்கள் 5-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்பு மலேசியா 27 ரன்களுக்கும், தாய்லாந்து 37 ரன்களுக்கும் இந்தியாவிடம் சுருண்டுள்ளன.
பாகிஸ்தான் மகளிர் அணி இதற்கு முன்பு 2024-ல் நியூசிலாந்திற்கு எதிராக 56 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதே அவர்களின் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது அந்த மோசமான சாதனையை பாகிஸ்தான் முறியடித்துள்ளது. 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications

