தோனி பற்றி உருகிய பாகிஸ்தான் கேப்டன்.. உலகக் கோப்பைக்கு முன் மனம் திறந்த பாத்திமா சனா
கொழும்பு: இந்தியா மற்றும் இலங்கையில் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள 23 வயதான பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் பாத்திமா சனா, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை முன் மாதிரியாக பார்ப்பதாகக் கூறியுள்ளது, கிரிக்கெட் உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியத் துணைக்கண்டத்தில் உலகக் கோப்பையை வெல்வது எப்படி என்பதற்கு தோனியை விடச் சிறந்த உதாரணம் இருக்க முடியாது. இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்துள்ள பாத்திமா சனா, தோனியின் தலைமைப் பண்புகளிலிருந்து தான் கற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

"உலகக் கோப்பை போன்ற ஒரு பெரிய தொடரில் கேப்டனாகச் செயல்படும்போது, ஆரம்பத்தில் பதற்றம் ஏற்படுவது இயல்புதான். ஆனால், ஒரு கேப்டனாக நான் மகேந்திர சிங் தோனியைத்தான் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார் பாத்திமா சனா.
மேலும், "இந்தியா மற்றும் சிஎஸ்கே அணிகளின் கேப்டனாக அவரது போட்டிகளை நான் பார்த்திருக்கிறேன். களத்தில் அவர் எடுக்கும் முடிவுகள், அவரது அசாத்தியமான அமைதி, சக வீரர்களுக்கு அவர் கொடுக்கும் ஆதரவு... இவையெல்லாமே ஒரு கேப்டனாகக் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடங்கள். எனக்கு கேப்டன் பதவி கிடைத்தபோது, நான் தோனியைப் போல மாற வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக, அவரது பேட்டிகளைப் பார்த்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்," என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தடையை உடைப்போம்!
2025 மகளிர் ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் இலக்கு, நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவதுதான். இதுகுறித்து நம்பிக்கையுடன் பேசிய பாத்திமா சனா, "இந்த முறை அந்த ராசியில்லாத பயணத்தை நிச்சயம் உடைப்போம். அரையிறுதிக்கு அணியை அழைத்துச் செல்வதே எனது இலக்கு" என்றார்.
"பாகிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட் வளர்ந்து வந்தாலும், இன்னும் ஒரு தடை இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்படுவதன் மூலம் அந்தத் தடையை நாங்கள் உடைத்தெறிய வேண்டும். பள்ளிகளில் சிறுமிகள் கிரிக்கெட் ஆடத் தொடங்கியுள்ளனர், போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன. ஐசிசி பரிசுத் தொகையை அதிகரித்திருப்பதும் ஒரு நல்ல விஷயம். இவை அனைத்தும் பாகிஸ்தானில் உள்ள இளம் வீராங்கனைகளுக்கு உத்வேகம் அளிக்கும்" என்றும் அவர் கூறினார்.
எதிரணி கேப்டனாக இருந்தாலும், தோனியின் தலைமைப் பண்புகளை பாகிஸ்தான் மகளிர் அணி கேப்டன் புகழ்ந்து பேசியிருப்பது, இருநாட்டு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications