மிர்புர்: ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட்டில் இன்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் வங்கதேசத்தில் நடந்து வருகிறது, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 நாடுகள் பங்கேற்றுள்ளன.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் கடைசி லீக் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசியது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக தில்ஷன் ஆட்டமிழக்காமல் 75 ரன்களை குவித்தார். சண்டிமால் 58 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சர்பராஸ் அகமது (38), உமர் அக்மல் (48) ரன்களும் எடுத்தனர். உமர் அக்மல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆசிய கோப்பையில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதும் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இந்தியா தான் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. அதற்கு அடுத்தபடியாக வங்கதேசம் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்திய அணியிடம் மட்டும் தோல்வியடைந்தது.
பாகிஸ்தான் அணி 2 வெற்றி மற்றும் 2 தோல்வி பெற்றுள்ளன. இலங்கை அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு எமிரேட் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்தது.