இஸ்லாமாபாத்: அதிவேக பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில், பாகிஸ்தானின் முதல் தர போட்டி இளம் வீரர் ஜுபைர் அகமது, பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
பாகிஸ்தானின் கிளப் அணியில் விளையாடி வந்தவர் இளம் வீரர் ஜுபைர் அகமது. அவர் மர்தானில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 14 ஆம் தேதி) விளையாடியபோது பவுன்சர் பந்து அவரது தலையில் தாக்கியது.

ஹெல்மெட் போடாத நிலையில், அவர் பேட்டிங் செய்ததால், படுகாயம் அடைந்த நிலையில், ஜுபைர் அகமது உயிரிழந்துள்ளார்.
ஜூபைர் அகமது மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், " பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளது. ஜுபைர் அகமது குவெட்டா பியர்ஸ் அணிக்காக 4 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் பிலிப் ஹூக்ஸ் உள்ளூர் போட்டியின் போது, பவுன்சர் பந்து பின்கழுத்து பகுதியில் தாக்கியதில் மைதானத்திலேயே நினைவு இழந்து சுருண்டு விழுந்து இறந்தார். அதன் பிறகு பாகிஸ்தான் ஜுபைர் அகமதுவின் மரணம் கிரிக்கெட் உலகை அதிர வைத்துள்ளது.