இஸ்லாமாபாத்: உலக கோப்பையில் அற்புதமாக ஆடிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், டெஸ்ட் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வை அறிவித்து உள்ளார்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் 2009-ம் ஆண்டு ஜூலையில், தமது 17வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டி தான் அவருக்கு முதல் போட்டியாக அமைந்தது.

இதுவரை, 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 119 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். தற்போது 27 வயதாகும் அவர், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது தனக்கு மகிழ்ச்சியளித்தது. தற்போது ஒருநாள் போட்டி, மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் முழு கவனத்தை செலுத்த உள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதால், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இது எனது சொந்த முடிவு. தனக்கு சர்வதேச போட்டிகளில் வாய்ப்பளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும், சக வீரர்களுக்கும் நன்றி என்று கூறியுள்ளார். நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 17 விக்கெட்டுகள் எடுத்து சிறப்பாக செயல்பட்டார்.
சூதாட்ட விவகாரம் காரணமாக பாகிஸ்தான் அணியிலிருந்து தடை செய்யப்பட்டார். 5 ஆண்டுகள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அணியில் இடம்பெற்று சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.