மும்பை: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், 'ஃபினிஷர்' என ரசிகர்களால் அழைக்கப்பட்டவருமான ஆசிப் அலி, தனது 33-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும், உலகம் முழுவதும் நடைபெறும் உள்ளூர் மற்றும் லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக அதிரடியாக விளையாடி, 2018-ல் அந்த அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். குறிப்பாக, இறுதிப் போட்டியில் இக்கட்டான நிலையில் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களை விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதன் பலனாக, அதே ஆண்டு பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்தார். பவர் ஹிட்டர்கள் பற்றாக்குறையால் தவித்து வந்த பாகிஸ்தான் அணிக்கு, ஆசிப் அலியின் வருகை பெரும் நம்பிக்கையை அளித்தது.

குறுகிய காலமே சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், சில மறக்க முடியாத இன்னிங்ஸ்களால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். குறிப்பாக, 2021 டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, பாகிஸ்தான் அணிக்கு கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19-வது ஓவரில் மட்டும் 4 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, பாகிஸ்தானுக்கு ஒரு த்ரில் வெற்றியைத் தேடித் தந்தார். அதேபோல, 2022 ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக 8 பந்துகளில் 16 ரன்கள் அடித்து, அணியின் வெற்றிக்கு உதவினார்.
எனினும், அவரது ஆட்டத்தில் போதிய நிலைத்தன்மை இல்லாதது பெரும் குறையாகப் பார்க்கப்பட்டது. ஃபார்ம் இல்லாத காரணத்தால் அணியில் தனது இடத்தை இழந்த அவர், கடைசியாக 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாம் தர பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். இந்நிலையில், தற்போது சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
"பாகிஸ்தான் ஜெர்சியை அணிந்தது என் வாழ்நாளின் மிகப்பெரிய கௌரவம். என் நாட்டிற்காக கிரிக்கெட் களத்தில் சேவை செய்தது என் வாழ்வின் பெருமையான அத்தியாயம்" என்று அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். ஆசிப் அலி, பாகிஸ்தானுக்காக 21 ஒருநாள் போட்டிகளிலும், 58 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.