ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் திலக் வர்மா அறிமுகமான நிலையில், தென்னாப்பிரிக்கா அணியின் இளம் வீரர் டிவால்ட் பிரெவிஸ் வீடியோ வெளியிட்டு வாழ்த்திய சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களில் முக்கியமானவர்கள் திலக் வர்மா மற்றும் டிவால்ட் பிரெவிஸ். குட்டி டி வில்லியர்ஸ் என்று கொண்டாடப்பட்ட டிவால்ட் பிரெவிஸை வாங்க சென்னை மற்றும் மும்பை அணிகள் போட்டிபோட்டன. அதேபோல் திலக் வர்மாவையும் ஐபிஎல் ஏலத்தில் வாங்க சென்னை மற்றும் மும்பை அணிகள் போட்டிபோட்டன. இந்த இரு போட்டிகளிலும் மும்பை அணியே வென்றது.

ஐபிஎல் தொடரின் இருபெரும் அணிகள் இந்த இரு இளம் வீரர்களையும் வாங்குவதற்கு போட்டிபோட்ட போதே இவர்கள் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இந்த நிலையில் அடுத்த 2 ஆண்டுகளில் திலக் வர்மா, இந்திய அணிக்காக அறிமுகமாகியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அறிமுகமான திலக் வர்மா 22 பந்துகளில் 39 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார். எந்த பவுலருக்கும் பயப்படாமல் திலக் வர்மா ஆடிய ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர், இந்திய அணியின் எதிர்காலத்திற்கான வீரர்களில் ஒருவர் திலக் வர்மா என்று பாராட்டி சென்றுள்ளனர். இந்த நிலையில் மும்பை அணியில் ஒன்றாக இணைந்து சகோதரர்களாக மாறிய டிவால்ட் பிரெவிஸ், திலக் வர்மா அறிமுகமானதற்காக வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானதற்காக முதலில் பிரெவிஸ் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகிறேன். உனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் எவ்வளவு மகிழ்ச்சியடைவார்கள் என்பதை நினைத்து பார்க்கிறேன். உன் கனவை எட்டிபிடித்ததை எண்ணி மகிழ்ச்சியாக உள்ளது. இது எனக்கு கூஸ்பம்ப் உணர்வை கொடுத்துள்ளது. அதிலும் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசிய போது கொண்டாடிவிட்டேன். இந்த தொடர் முழுவதும் ஆதரவாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த திலக் வர்மா, ஆனந்த கண்ணீருடன் நன்றி கூறினார்.