ட்ரெண்ட்பிரிட்ஜ் : இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்களை எடுத்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 168 ரன்கள் முன்னிலை பெற்றது.இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா அற்புதமாக பந்துவீசி இங்கிலாந்து அணியின் 5 விக்கெட்களை வீழ்த்தினார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அவர் 5 விக்கெட்களை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். முதல் இரண்டு போட்டிகளிலும் பாண்டியா அவ்வளவு சிறப்பாக விளையாடாத காரணத்தினால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அவர் முழுமையான ஆல் ரவுண்டர் இல்லை என்று மைக்கேல் ஹோல்டிங் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக பாண்டியா சிறப்பாக பந்துவீசி தனது திறமையை நிரூபித்துள்ளார். இவரது சிறப்பான பந்துவீச்சின் மூலம் இங்கிலாந்து அணி இந்திய அணிக்கெதிராக அதன் சொந்த மண்ணில் ஐந்தாவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.