பெற்றோரை இழந்த பப்பு
23 வயதான பப்பு ராய் தியோதர் ட்ராபியில் இந்தியா "சி" அணிக்காக ரஹானே தலைமையில் ஆட உள்ளார். இவர் சிறு வயதில் தன் தாய் தந்தையை இழந்துள்ளார். அவர்களை பற்றிய எந்த ஞாபகங்களும் இவருக்கு இல்லை. பீகாரில் இருந்து பிழைப்பு தேடி கொல்கத்தா வந்துள்ளனர் இவரது பெற்றோர். கொல்கத்தாவில் அவர்கள் நோய் வந்து இறந்துள்ளனர்.
விக்கெட்டுக்கு 10 ரூபாய் கிடைக்கும்
ஆதரவற்ற பப்புவை அவரது மாமாவும், அத்தையும் எடுத்து வளர்த்துள்ளனர். இவர் பதினைந்து வயதாக இருக்கும் போது அவரது மாமா இறந்துள்ளார். அவர் வசித்த பகுதியின் அருகே இருக்கும் இளைஞர்கள் கிரிக்கெட் போட்டியில் பப்புவை சேர்த்துக் கொண்டு ஒரு விக்கெட் எடுத்தால் 10 ரூபாய் அளித்துள்ளனர். மாமா இல்லாத நிலையில், கிரிக்கெட் விளையாட்டில் கவனம் செலுத்தி அந்த இளைஞர்கள் கொடுக்கும் காசில் வாழ்க்கையை ஓட்டி இருக்கிறார். அந்த பத்து ரூபாயை சம்பாதிக்கவே பப்பு பந்துவீச்சாளராக தன் கிரிக்கெட் வாழ்வை துவங்கி, இப்போதும் பந்துவீச்சாளராகவே ஜொலித்து வருகிறார்.
கொல்கத்தாவில் புறக்கணிப்பு
அப்படியே கொல்கத்தா கிளப் கிரிக்கெட் உலகத்துக்குள் நுழைந்த பப்பு ராய், அங்கே கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்துள்ளார். அங்கே தான் இடது கை சுழற்பந்துவீச்சாளராக இவரை மாற்றியுள்ளார் அங்கே இருந்த பயிற்சியாளர் சுஜீத் சாஹா. 2011ஆம் ஆண்டில் டல்ஹௌசி கிளப்புக்காக 9 போட்டிகள் ஆடி 50 விக்கெட்கள் எடுத்து இருக்கிறார். எனினும், அங்கே முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க பப்புவை புறக்கணித்துள்ளனர். அதனால், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
நண்பர்கள் கொடுத்த உணவு
பின்னர், கொல்கத்தாவில் இருந்து உணவு, உறைவிடம் தேடி ஒடிசாவுக்கு பயணித்துள்ளார். அங்கே முசாகிர் அலி கான் மற்றும் ஆசிப் இக்பால் கான் என இரண்டு நண்பர்களை பிடித்த பப்பு ராய், அவர்கள் அளித்த இடம் மற்றும் உணவை கொண்டு தன் கிரிக்கெட் பயணத்தை ஒடிசாவில் மீண்டும் துவங்கியுள்ளார்.
ஒடிஸாவில் முன்னேற்றம்
ஒடிஸா அண்டர் 23 அணியில் இடம் பிடித்த பின் ஓரளவு தன் கிரிக்கெட் பயணத்தில் நிலையாக பயணிக்கத் துவங்கியுள்ளார் பப்பு ராய். ஒடிஸா கிரிக்கெட் அணியில் நல்ல முன்னேற்றம் அடைந்த பப்பு ராய் இன்று தியோதர் ட்ராபியில் ஆடவுள்ளார். என்றாவது ஒருநாள் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறுவேன் என நம்பிக்கையுடன் கூறுகிறார் பப்பு.