பாரிஸ் : பாராலிம்பிக் பேட்மிண்டன் பிரிவில் தமிழக வீராங்கனை துளசி முருகேசன், வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை துளசிக்கு கிடைத்திருக்கிறது.
ம்எஸ் யு 5 பிரிவில் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை யங் க்யூ வை துளசி என்று எதிர் கொண்டார். ஏற்கனவே நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் இதே பிரிவில் சீன வீராங்கனை தங்கம் வென்று இருந்தார். இதனால் நடப்பு சாம்பியனை எதிர்கொள்ள போகிறோம் என்ற பயமே இல்லாமல் துளசி ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்து கடுமையாக போராடி சீன வீராங்கனைக்கு நெருக்கடி கொடுத்தார்.

எனினும் முதல் செட்டை 17 க்கு 21 என்ற கணக்கில் துளசி இழந்தார். இதனை அடுத்து இரண்டாவது செட்டில் சீன வீராங்கனை தன்னுடைய அனுபவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பத்துக்கு 21 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் துளசி தோல்வியை தழுவினாலும், அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
துளசி முருகேசன், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் பிறப்பால் மாற்றுத்திறனாளி ஆவார். 22 வயதான துளசி தற்போது கால்நடை மருத்துவ பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தனது மகள் மாற்றுத்திறனாளியாக பிறந்தாலும் அதனை அவர் ஒரு குறையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக இருந்த தந்தை முருகேசன், துளசிமதிக்கு சிறுவயதில் இருந்து விளையாட்டு பயிற்சிகளை வழங்கி வந்திருக்கிறார்.
ஒருநாள் பேட்மிண்டன், ஒரு நாள் கூடைப்பந்து ஒருநாள் தடகளம் என தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயிற்சியை அவர் வழங்கி வந்திருக்கிறார். இதில் பேட்மிண்டன் தமக்கு கடினமாக இருந்ததாக துளசி கூறிய நிலையில், அப்போது இனி நீ பேட்மிண்டன் தான் விளையாட வேண்டும் என்று தந்தை வற்புறுத்தியதாக துளசி கூறி இருக்கிறார்.
துளசி வீட்டில் ஏழ்மை இருந்தாலும் அதனை ஒரு தடையாக இருந்து விடக்கூடாது என தந்தை முருகேசன் அவருக்கு உற்றத் துணையாக இருந்து கடும் பயிற்சி வழங்கியிருக்கிறார். 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கேலோ இந்தியா போட்டியில் துளசி வெற்றி பெற்றிருக்கிறார்.இதை அடுத்து பி வி சிந்துவின் பேட்மிண்டன் பயிற்சியாளர் ஆன கோபிசந்த் அகாடமியில் இருந்து வந்த பயிற்சியாளர் இர்பான் துளசிமதியின் திறமையை கண்டெடுத்து அவரை தேசிய அணியின் பயிற்சியாளருக்கு தெரியப்படுத்திருக்கிறார்.
இதனை அடுத்து ஒரு ஆண்டு ஹைதராபாத்தில் தங்கி துளசி மதி பயிற்சி எடுத்து வந்திருக்கிறார். இப்படி பல தடைகளை கடந்து வந்த துளசி தற்போது வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். இதேபோன்று வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் தமிழக வீராங்கனை மனிஷா ராமதாஸ் டென்மார்க் வீராங்கனை கேத்தரினை எதிர்கொண்டார்.
இதில் தொடக்கம் முதலில் அதிரடியாக விளையாடிய மனிஷா 21க்கு 12, 21க்கு 8 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார். இந்த போட்டி வெறும் 25 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.இதன் மூலம் பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனிஷா கைப்பற்றினார். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மனிஷா கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான பாரா பேட்மிண்டன் வீராங்கனை விருதை வென்றிருக்கிறார். 2022 ஆம் ஆண்டு மனிஷா 11 தங்கம் 5 வெண்கல பதக்கங்களை சர்வதேச அளவில் கைப்பற்றினார் .