ஜெர்மனி : பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை லவ்லினாவுக்கு தற்போது காயம் ஏற்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு முன் குத்துச்சண்டை வீரர்களுக்கு ஜெர்மனியில் மத்திய அரசு சார்பாக பயிற்சி முகாம் ஒன்று நடைபெற்றது.
இதில் 26 வயதான லவ்லினா பங்கேற்றார். ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் அசாம் வீராங்கனை லவ்லினா என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மகளிருக்கான 69 கிலோ எடைப் பிரிவில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த நிலையில் தற்போது பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 69 கிலோ எடை பிரிவு நீக்கப்பட்டு இருக்கிறது. இதனால் லவ்லினா தனது உடல் எடையை அதிகரித்து 75 கிலோ எடை பிரிவில் பங்கேற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமக்கு காயம் ஏற்பட்டாலும் அதிலிருந்து மீண்டு தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடுவேன் என்ற உத்வேகத்தில் லவ்லினா பயிற்சி செய்து வருகிறார். இந்த சூழலில் ஜெர்மனியில் தங்கி இருக்கும் இந்திய அணி குத்துச் சண்டை வீரர்களுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மர்ம வைரஸ் தாக்கி இருப்பதால் பல போட்டியாளர்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக இந்திய வீராங்கனை பிரீத்தி பண்பார், உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் மூன்று நாள் சிகிச்சை பெற்று மீண்டும் பயிற்சி முகாமுக்கு திரும்பி இருக்கிறார்.
ஒலிம்பிக் போன்ற தொடருக்கு முன்பு இதுபோல் வீரர்கள் வீராங்கனைகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டிருப்பதால் அவர்களால் எவ்வாறு சிறப்பாக செயல்பட முடியும் என்று கேள்வி எழுந்துள்ளது. எனினும் வீரர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாகவும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நல குறைவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு பயிற்சிக்குத் திரும்பும் வழியை ஏற்படுத்தி வருவதாக இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் தெரிவித்துள்ளது.