பாரிஸ் : ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் கனவாக இருக்கின்றது. இதற்காக பல விளையாட்டு வீரர்கள் பல தியாகங்களை செய்திருக்கிறார்கள். ஆனால் இங்கு ஆஸ்திரேலியா ஹாக்கி அணியில் டாவ்சன் என்ற வீரர் ஒருவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக தன்னுடைய கைவிரலையே தியாகம் செய்து இருக்கிறார்.
கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெள்ளி பதக்கம் வென்றது. இந்த அணியில் மாட் டாவ்சன் என்ற வீரர் இடம் பிடித்திருந்தார். தமக்கு வெள்ளி பதக்கம் போதாது. எப்படியாவது தங்கம் வெல்ல வேண்டும் என டாவ்சன் கடுமையாக பயிற்சி செய்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்காக பெர்த் நகரில் ஆஸ்திரேலியா ஹாக்கி அணி கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு பயிற்சி முகாமில் ஈடுபட்டிருக்கிறது. அப்போது ஹாக்கி பேட் ஒன்று டாவ்சனின் கைவிரலை அடித்து உடைத்து விட்டது. இதனால் வலியில் துடித்த டாவ்சன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
கைவிரலில் ஏற்பட்டுள்ள காயம் குணமடைய வேண்டும் என்றால் சுமார் இரண்டு மூன்று மாதம் தாங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது தமது கனவு என்று கூறிய டாவ்சன், இதற்கு மாற்று வழி என்ன என்று கேட்டிருக்கிறார். இதை அடுத்து காயம் அடைந்த விரல் பகுதியை மட்டும் வெட்டி செயற்கை விரலை பொருத்தினால் மட்டுமே தங்களால் ஒலிம்பிக் போட்டியில் விளையாட முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை கேட்ட ஆஸ்திரேலிய வீரர் டாவ்சன், கொஞ்சம் கூட தயக்கம் அடையாமல் ஒலிம்பிக்கில் விளையாடுவது என்பது என்னுடைய கனவு என்றும், இதற்காக என்னுடைய கைவிரலையும் தியாகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன் எனக் கூறி மருத்துவருக்கு ஒப்புதல் வழங்கி விட்டார்.
இதனை அடுத்து மருத்துவர்கள் அவருடைய கையில் காயம் அடைந்த பகுதியை மட்டும் வெட்டி எடுத்துவிட்டு செயற்கையான விரலை பொருத்திருக்கிறார்கள்.தற்போது இந்த செயற்கை விரலை வைத்து தான் டாவ்சன் விளையாடுகிறார். ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய ஹாக்கி வீரர் செய்த இந்த தியாகம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது .