ஹிட்லருக்கு தலை வணங்க மறுத்த இந்திய ஜாம்பவான்.. ஜெர்மனியை வீழ்த்திய இந்திய ஹாக்கி படை
பாரிஸ்: இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் ஹாக்கி அணி எட்டு தங்கப் பதக்கங்களை வென்றது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், 1936 இல் ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக் தொடரில் இந்திய வீரர்களை வழிநடத்திய ஹாக்கி அணியின் கேப்டன் தயான் சந்த் அந்த எட்டு தங்கத்தை காட்டிலும் இந்தியர்களை பெருமை கொள்ள வைக்கும் செயல் ஒன்றை செய்தார்.
1936 ஒலிம்பிக் தொடரை ஹிட்லர் ஜெர்மனியில் நடத்தினார். தனது பெருமைகளை பறை சாற்றுவதற்காக அந்த ஒலிம்பிக் தொடரை அவர் பயன்படுத்திக் கொண்டார். உலக நாடுகள் முன் ஹிட்லரின் ஜெர்மனி முதன்மையான நாடு என்பதை காட்ட முயன்றார். அனைத்து நாடுகளுக்கும் மேல் ஜெர்மனி இருக்கிறது என காட்டிக் கொள்ள அவர் முயன்றார்.

அந்த ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ற அனைத்து நாடுகளின் வீரர்கள் குழுவும் துவக்க விழாவில் தங்கள் தேசிய கொடியை ஏந்தி வீரநடை போடும் போது, ஹிட்லருக்கு நேராக நின்று நாஜி சல்யூட் எனப்படும் கைகளை நேராக உயர்த்தி செய்யப்படும் சல்யூட் அடிக்க வேண்டும் என வற்புறுத்தப்பட்டனர். ஆனால், இரண்டு நாடுகள் மட்டும் அதை செய்ய மறுத்தது. அதில் ஒன்று அமெரிக்கா. மற்றொன்று, இந்தியா.
அமெரிக்கா ஒரு முக்கிய நாடு என்ற அடிப்படையில் சல்யூட் அடிக்க மறுத்ததில் ஒரு அரசியல் இருந்தது. ஆனால், பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியாவை சேர்ந்த வீரர்கள் குழு அதை செய்ய மறுத்தது அனைவரையும் திகைக்க வைத்தது. அப்போது இந்திய வீரர்கள் குழுவை தலைமை ஏற்று வழி நடத்திச் சென்றது இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் தயான் சந்த் ஆவார்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இந்தியர்கள் வாடிக் கொண்டிருந்த நிலையில், பிரிட்டிஷின் எதிரியான ஜெர்மனிக்கு எதிராக இந்தியா சல்யூட் அடித்து அவர்களுக்கு ஆதரவளிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஜெர்மனிக்கும், பிரிட்டிஷுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை, இரண்டு நாடுகளுமே ஆதிக்க மனப்பான்மை கொண்டவை என்பதை சரியாக உணர்ந்திருந்த அப்போதைய இந்திய விளையாட்டு வீரர்கள் ஒன்று சேர்ந்து ஹிட்லருக்கு சல்யூட் அடிக்கக் கூடாது என்ற முடிவை எடுத்தனர்.
அவர்களை தலைமையற்ற வழிநடத்திச் சென்ற தயான் சந்த் ஹிட்லர் முன் நிமிர்ந்து வீரநடை போட்டார். அவருக்கு சல்யூட் அடிப்பதற்கு பதிலாக தங்கள் சுயமரியாதையை குறிப்பிடும் வகையில் இதயத்தில் கை வைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து இந்திய ஹாக்கி அணி மீது ஜெர்மானிய ஊடகங்கள் தொடர்ந்து ஒரு கண் வைத்துக் கொண்டிருந்தன.
இதன் உச்சகட்டமாக இந்தியா மற்றும் ஜெர்மனி ஹாக்கி அணிகள் ஒலிம்பிக் ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் மோதின. அப்போது ஜெர்மனி அதிக பதக்கங்களை வென்று உலகிலேயே முன்னணி நாடு என காட்டிக் கொள்ள முயன்று கொண்டிருந்தது. இந்த நிலையில் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய அணி 8 கோல்களை அடித்து ஜெர்மனி வீரர்களை திக்கு முக்காட வைத்தது.
ஜெர்மனியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. 8 - 1 என்ற கோல் கணக்கில் இந்தியா, ஜெர்மனியை வீழ்த்தியது. அப்போது ஜெர்மானிய ஊடகங்கள் இந்திய வெற்றியை சிலாகித்து எழுதியிருந்தன. இந்திய வெற்றியை பெர்லின் (ஜெர்மனியின் தலைநகர்) நீண்ட காலத்துக்கு நினைவில் வைத்திருக்கும் என்று எழுதி இந்திய வீரர்களை பாராட்டி இருந்தனர்.
அப்போது ஹிட்லர் கேப்டன் தயான் சந்தை நேரில் சந்தித்ததாகவும், அவர் ஜெர்மனிக்காக ஹாக்கி விளையாட ஒப்புக் கொண்டால் அவருக்கு ஜெர்மனி இராணுவத்தில் உயர் அதிகாரி பதவி வழங்குவதாக கூறியதாகவும் ஒரு கதை இன்றும் உலவிக்கொண்டு இருக்கிறது. அது குறித்து தயான் சந்த் தனது சுயசரிதையில் எழுதவில்லை என்பதால் அது உண்மைதானா என்பது தெரியவில்லை. ஆனால், ஹிட்லர் முன் தயான் சந்த் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி தலை நிமிர்ந்து நின்று வெற்றி பெற்றது மட்டும் உண்மை.


Click it and Unblock the Notifications