டெல்லி: 124 ஆண்டுகள் ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவைச் சேர்ந்த ஒரே வீரர் இரண்டு பதக்கங்களை வென்றது மூன்று முறை மட்டுமே நடந்துள்ளது. இதில் ஆச்சரியப்படத்தக்க வகையில் 1900 ஆவது ஆண்டு ஒலிம்பிக் தொடரிலேயே இந்தியாவை சேர்ந்த ஒருவர் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறார்.
ஆனால், அவர் ஒரு ஆங்கிலேயர். அவர் பெயர் நார்மன் பிரிட்சர்ட். அவர் ஓட்டப்பந்தய வீரர் ஆவர். 1900 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஒரு வெள்ளிப் பதக்கமும், 200 மீட்டர் தடுப்பு ஓட்டப்பந்தயத்தில் மற்றொரு வெள்ளிப் பதக்கமும் வென்றார். அந்த சாதனை 112 ஆண்டுகளுக்கு வேறு எந்த இந்தியராலும் சமன் செய்ய முடியாத சாதனையாக இருந்தது.

அதன் பின் 2008 ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த வீரர் சுஷில் குமார் வெண்கலம் வென்றார். அடுத்து 2012 ஆம் ஆண்டு அவர் மீண்டும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார். இதை அடுத்து இந்தியாவுக்காக இரண்டு பதக்கங்கள் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை அவர் செய்தார். அதற்கு அடுத்து பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து அந்த சாதனையை செய்தார்.
அவர் 2016 ரியோ ஒலிம்பிக் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அடுத்து 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் வெண்கலம் வென்றார். அதன் மூலம், இந்தியாவுக்காக இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் பெண் என்ற சாதனையையும் சேர்த்து செய்தார். இதுவரை மொத்தம் மூன்று இந்தியர்கள் மட்டுமே ஒலிம்பிக் தொடரில் இரண்டு முறை பதக்கங்களை வென்று உள்ளனர். அதிலும் ஒரே ஆண்டில் இரண்டு பதக்கங்களை வென்ற சாதனையை செய்தது நார்மல் பிரிட்சர்ட் மட்டுமே.