பாரிஸ் : 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கில் அவரது சார்பாக என்ன மாதிரியான வாதங்கள் முன்வைக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
2024 ஒலிம்பிக் தொடரில் மகளிர் 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தத்தின் இறுதிப் போட்டிக்கு வினேஷ் போகத் முன்னேறி இருந்தார். போட்டி நாள் அன்று காலை எடை சரி பார்ப்பின் போது 50 கிலோவுக்கு கீழ் எடை இருக்க வேண்டும். ஆனால், வினேஷ் போகத்தின் எடை 50 கிலோவுக்கு மேல் 100 கிராம் கூடுதலாக இருந்தது.

100 கிராம் கூடுதல் எடை காரணமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தால் வெள்ளிப் பதக்கம் கிடைத்து இருக்கும். ஆனால், தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் பதக்கம் அளிக்க முடியாது என விதிப்படி அதிகாரிகள் அறிவித்தனர். அதனால், மனம் உடைந்து போன அவர் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
இதன் இடையே இறுதிப்போட்டி வரை முன்னேறிய அவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பாக விளையாட்டுக்கான சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் விசாரணை இரண்டு நாட்களாக நடந்தது. அதில் வினேஷ் போகத் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதம் இதுதான் -
"கூடுதலாக இருக்கும் 100 கிராம் எடை என்பது முற்றிலும் குறைவானது. ஒரு வீராங்கனையின் உடல் எடையில் அது 0.2 சதவீதம் மட்டுமே. வெயில் காலத்தில் மனித உடலில் ஏற்படும் ஊதுதல் என்ற செயல்பாட்டின் காரணமாக அந்த எடை அதிகரித்து இருக்கலாம். அதிக வெப்பம் மனித உடலில் அதிக நீரை சேமித்து வைக்கும். வெயில் காலங்களில் இது போல நடக்கும். மேலும், அவர் முந்தைய தினம் மூன்று போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதனால், அவரது உடலில் அதிக சதை சேர்ந்திருக்கலாம்."
"போட்டிகளுக்கு இடையே தனது சக்தியை தக்க வைத்துக் கொள்ள அவர் உணவை எடுத்துக் கொண்டிருக்கலாம். இதன் காரணமாக அவரது எடை அதிகரித்து இருக்கலாம். அவர் ஏமாற்றுவதற்காகவோ, மற்ற வீராங்கனைக்கு எதிராக முன்னிலை பெறுவதற்காகவோ இதை செய்யவில்லை. ஆனால், தற்போது அவர் தனது கடினமான முயற்சியில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய பின் அவரை தகுதி நீக்கம் செய்வது என்பது சரியல்ல. அவருக்கு வெள்ளி பதக்கம் அளிக்க வேண்டும். அதை அவர் அவரது கடின முயற்சியால் தான் வென்று இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்." இவ்வாறு அவரது சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு ஆகஸ்ட் 13 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.