திருப்பூர் : பாரிஸ் ஒலிம்பிக் தொடர் இன்னும் மூன்று நாட்களில் தொடங்கப்படுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் பாரிஸ் நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் பார்வையாளர்களும் அதிக அளவு பாரிஸ் நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
இதுவரை சுமார் 80 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. இந்த நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ரசிகர்கள் அங்கு இருக்கும் பிரத்யேக ஒலிம்பிக் கடைகளில் ஆடைகள் வாங்க வேண்டும் என்றால் அவர்கள் கண்டிப்பாக திருப்பூரில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை தான் வாங்க வேண்டும்.

ஆம் திருப்பூரில் இயங்கி வரும் ஆடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று சுமார் பத்து லட்சம் பிரத்யேக ஆடைகளை பாரிஸ்க்கு ஒலிம்பிக்கிற்காக ஏற்றுமதி செய்து இருக்கிறது. தமிழகத்தின் ஜவுளிகளின் தலைநகராக விளங்கும் திருப்பூரில் தீபா ஜெயன் மற்றும் அவருடைய மகள் ஐஸ்வர்யா ஆகியோர் ஜவுளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
2004 ஆம் ஆண்டு Back Bay India என்று இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு பல்வேறு விளையாட்டு தொடர்களில் தங்களது ஆடைகளை ரசிகர்கள் வாங்குவதற்காக அனுப்பியிருக்கிறார்கள். கடந்த செப்டம்பர் மாதம் பிரான்சில் நடைபெற்ற ரக்பி உலக கோப்பையிலும் இந்த நிறுவனத்தின் ஆடைகள் இடம் பெற்றிருந்தன.
இந்த நிலையில் ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வ ஆடைகள், பரிசு பொருட்கள் போன்றவை ரீடெயில் ஷாப் முறையில் ஒலிம்பிக் கமிட்டியால் விற்கப்படுகின்றன. இதற்காக உலகம் முழுவதும் சுமார் 60 நிறுவனங்கள் தங்களுடைய ஆடைகளை அனுப்பி இருக்கிறார்கள். இதில் நமது திருப்பூர் பேக் பை நிறுவனமும் ஒன்று.
தங்களிடம் ஆறு ஜவுளி தொழிற்சாலைகள் இருப்பதாகவும், இதில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் தான் தற்போது திருப்பூரில் இருந்து பாரிஸ்க்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த நிறுவனத்தை நடத்தி வரும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். ஜவுளி துறையில் ஆண்களே சாதித்து வரும் நிலையில் தாங்கள் கடின உழைப்பை மேற்கொண்டு பாரிஸ் வரை தங்களது ஆடைகளை அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று தங்களுடைய நிறுவனம் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதாகவும், தாங்கள் வாடிக்கையாளர்கள் எந்த மாதிரி வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதனை செய்து தருவதே எங்களுடைய பணி என்றும் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள தன்னார்வலர்கள், அனைவரும் தாங்கள் தயாரித்த ஆடைகளை தான் அணிய இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் நீங்கள் ஏதேனும் ஒரு ஆடையில் மேட் இன் இந்தியா என்று அச்சடிக்கப்பட்டதை பார்த்தீர்கள் என்றால் அது திருப்பூரில் இருந்து தான் வந்தது என்று எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.