மெக்கிராத் சட்டையைப் போட்டுக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக களம் இறங்கும் ஜோயல் பாரிஸ்
பெர்த்: முன்னாள் ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் கிளன் மெக்கிராத் பயன்படுத்திய எண் 11 கொண்ட ஜெர்சியைப் போட்டுக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் களம் காணவுள்ளாராம் அறிமுக வேகப் பந்து விச்சாளர் ஜோயல் பாரிஸ்.
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஜோயல் பாரிஸ் மற்றும் போலன்ட் ஆகிய இரு புதிய வேகப் புயல்களை ஆஸ்திரேலியா களம் இறக்கவுள்ளது. இவர்கள் இருவரும் இந்தியாவுக்குப் பெரும் மிரட்டலாக இருப்பார்கள் என்றும் ஆஸ்திரேலியத் தரப்பு கூறி வருகிறது.
இருப்பினும் இதுவரை இந்தியத் தரப்பு இவர்களைப் பற்றி எந்தக் கவலையையும் வெளிப்படுத்தவில்லை. வார்ம் அப் போட்டிகளில் இந்தியா சத்தம் போடாமல் கலக்கி வருகிறது. அதேசமயம், வார்ம் அப் போட்டிகளை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது என்பதால் இந்தப் புதிய புயல்களை இந்தியா எப்படி சமாளிக்கும் என்பது குறித்து ஐடியா நம்மிடம் இல்லை.

23 வயதில் அறிமுகமாகும் ஜோயல்
இந்த நிலையில் 23 வயதாகும் ஜோயல் ஜனவரி 12ம் தேதி நடைபெறவுள்ள முதல் ஒரு நாள் போட்டியில் அறிமுகமாவார் என்று தெரிகிறது. இதே வயதில்தான் ஜாம்பவான் பந்து வீச்சாளர் மெக்கிராத்தும் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெக்கிராத் ஜெர்சியுடன்
எனவே மெக்கிராத்தின் ராசியான 11ம் எண் கொண்ட ஜெர்சியை அணிந்தபடி தனது முதல் போட்டியில் பந்து வீச ஆர்வமாக உள்ளாராம் பாரிஸ்.

381 விக்கெட்களை வீழ்த்தியவர்
மெக்கிராத் தனது ஒரு நாள் போட்டி வரலாற்றில் 381 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். மிகச் சிறப்பான வேகப் பந்து வீச்சாளராகவும் வலம் வந்தவர்.

போலன்டை விட
இந்த நிலையில் ஜனவரி 12ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் மிட்சல் ஜான்சன் மற்றும் ஸ்டார்க் ஆகியோருடன், ஜோயல் பா்ரிஸ் களம் இறக்கப்படலாம் என்று தெரிகிறது. இன்னொரு புதுமுகமான போலன்ட் இப்போட்டியில் இடம் பெறுவது சந்தேகம் என்கிறார்கள்.

அட்டகாசமாக பந்து வீசுவேன்
போட்டி நடைபெறும் பெர்த் (வாகா) மைதானம் வேகப் பந்து வீச்சாளர்களின் சொர்க்கமாகும். எனவே இப்போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசி இந்தியாவை நிலை குலைய வைக்க முடியும் என கூறியுள்ளார் பாரிஸ்.

நல்ல சான்ஸ் உள்ளது
இதுகுறித்து அவர் கூறுகையில் சரியான லென்த், பிட்ச்சில் பந்து வீசினால் நிச்சயம் விக்கெட்களைப் பெற முடியும். பந்து இங்கு நன்றாக ஸ்விங் ஆகும். அடித்து ஆடுவது சற்று கடினம் என்றார் அவர்.

சரியாக வீசாவிட்டால்
மேலும் அவர் கூறுகையில், அதேசமயம், நாங்கள் சரியாக பந்து வீசத் தவறினால் அவர்களுக்கு சாதகமாக நிலைமை மாறி விடும். காரணம், மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களைக் கொண்ட அணி இந்தியா. இதை நாங்கள் மறந்து விடக் கூடாது என்றார்.

2004க்குப் பிறகு
2004ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் வாகா மைதானத்தில் மோதவுள்ளன என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications