9 விரல்களுடன் இந்தியாவுக்கு ஆடியது பெருமையா இருக்கு.. அதிர வைக்கும் உண்மையை சொன்ன இந்திய வீரர்!
மும்பை : இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்த பார்த்திவ் பட்டேல் பலரும் அறியாத ஒரு விஷயத்தை கூறி இருக்கிறார்.
தன் கைகளில் ஒன்பது விரல்கள் மட்டுமே இருப்பதை கூறிய அவர், அந்த நிலையில் தான் இந்திய அணிக்கு ஆடியதை பெருமையாக கருதுவதாக கூறி உள்ளார்.
9 விரல்களுடன் விக்கெட் கீப்பிங் செய்வது கடினம் என குறிப்பிட்டுள்ள அவர், கிளவுஸை அணிந்து கொண்டு சமாளித்து ஆடினார் என்பது பற்றியும் கூறி உள்ளார்.
Recommended Video

இளம் வயதில் அறிமுகம்
சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து மிக இளம் வயதில் இந்திய அணியில் அறிமுகம் ஆனவர் பார்த்திவ் பட்டேல். விக்கெட் கீப்பராக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 2002ஆம் ஆண்டு தன் 17 வயதில் அறிமுகம் ஆனார். இங்கிலாந்து அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த போட்டியில் அறிமுகம் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

இடத்தை இழந்தார்
2003 உலகக்கோப்பை தொடரில் கூட இந்திய அணியில் மாற்று வீரராக இடம் பெற்று இருந்தார். எனினும், இந்திய அணியில் அவரால் தன் முத்திரையை பதிக்க முடியவில்லை. தோனி வந்த பின் பார்த்திவ் பட்டேல் இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பு குறைந்தது.

மீண்டும் கிடைத்த வாய்ப்பு
2018 தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான அணியில் அவர் இடம் பெற்றது பலரும் எதிர்பாராத நிகழ்வாக இருந்தது. தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியது, ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியது என இந்திய கிரிக்கெட்டில் தன் பெயரை பதிய வைத்துக் கொண்டே இருந்ததால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

ஒன்பது விரல்கள்
எனினும், அதன் பின் அவர் இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு பெறவில்லை. 35 வயதான நிலையில் அவர் உள்ளூர் போட்டிகளில் குஜராத் அணி கேப்டனாக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன் கையில் ஒன்பது விரல்கள் மட்டுமே உள்ளது பற்றி கூறி உள்ளார்.

என்ன நடந்தது?
அவருக்கு ஆறு வயதாக இருந்த போது பார்த்திவ் பட்டேல் கதவில் கை வைத்து தன் இடது கை சுண்டு விரலை இழந்து விட்டார். அதன் பின்னர் அவர் கிரிக்கெட் ஆடத் துவங்கிய போது விக்கெட் கீப்பராக ஒன்பது விரல்களுடனே ஆடினார்.

சற்று கடினமானது
இது பற்றி பார்த்திவ் பட்டேல் கூறுகையில், "எனக்கு ஆறு வயதாக இருந்த போது என் விரல் கதவில் சிக்கி துண்டாகி விட்டது. கடைசி விரல் விக்கெட் கீப்பிங் கிளவுசில் சரியாக நிற்காது என்பது சற்று கடினமானது. அதனால், நான் கிளவுஸை டேப் போட்டு ஒட்டி விடுவேன்" என்றார்.

பெருமையாக உள்ளது
மேலும், "அனைத்து விரல்களும் இருந்திருந்தால் அது எப்படி இருக்கும் என எனக்கு தெரியாது. ஆனால், திரும்பிப் பார்க்கும் போது ஒன்பது விரல்களுடன் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக ஆடியது பெருமையாக உள்ளது" என்று குறிப்பிட்டார் பார்த்திவ் பட்டேல்.


Click it and Unblock the Notifications