மும்பை : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஓய்வு எடுத்துக் கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக டி20 உலக கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசஸ் தொடர் என அனைத்து கோப்பையும் பேட் கம்மின்ஸ் வென்று அசத்தியிருக்கிறார்.
ஆனால் பேட் கம்மின்ஸ் தமது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரே ஒரு கோப்பை மட்டும் வெல்லவில்லை என்று வேதனை தெரிவித்திருக்கிறார். அந்தத் தொடரை வெல்வதற்காக தற்போது 8 வாரம் எந்தவித கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் பயிற்சி செய்ய இருப்பதாக கூறி இருக்கிறார்.

பாட் கம்மின்ஸ் தற்போது அமெரிக்காவில் நடைபெற்ற எம்.எல்.சி கிரிக்கெட் தொடரில் களம் இறங்கினார். தற்போது இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
ஆனால் இந்த தொடரில் தாம் விளையாட போவதில்லை என பாட் கம்மின்ஸ் கூறி இருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கிரிக்கெட் வீரர் அனைவரும் ஓய்வுக்கு பின் களத்திற்கு திரும்பும் போது புத்துணர்ச்சியாக உணர்வார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 18 மாதத்திற்கு முன்பு நடைபெற்றது. அதிலிருந்து இன்று வரை நான் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றேன். இதனால் ஒரு எட்டு வாரத்திற்கு நான் பந்து வீச போவதில்லை.
என் உடல் தகுதியை நான் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட போகின்றேன். அதன் பிறகு மீண்டும் கோடை கால கிரிக்கெட் சீசனுக்கு நான் தயாராக போகிறேன். இதன் மூலம் தொடர்ந்து ஒரே வேகத்தில் அதிக நேரம் என்னால் பந்து வீச முடியும். என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் கிட்டத்தட்ட அனைத்து தொடர்களையும் வென்று இருக்கின்றேன்.
ஆனால் இதுவரை பார்டர் கவாஸ்கர் தொடரை மட்டும் நான் வெல்லவில்லை. ஒரு டெஸ்ட் அணியாக நாங்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றோம். இந்திய அணியும் ஒரு நல்ல வீரர்கள் அடங்கிய அணியாக இருக்கிறார்கள். இந்திய அணிக்கு எதிராக தயாராக இந்த நேரம் எனக்கு தேவைப்படுகிறது என்று பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.