ராஜ்கோட் : மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.
இந்தப் போட்டியின் வெற்றிக்கு பின் பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், தன் அணியின் இரண்டு வீரர்கள் சிறப்பாக ஆடியதை குறிப்பிட்டு தான் இதை விட மகிழ்ச்சியுடன் இருக்கவே முடியாது என குறிப்பிட்டார். அந்த அளவுக்கு அந்த வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் முக்கிய வீரர்களாக இருக்கப் போகிறார்கள் என்பதையே அவர் அப்படி கூறி இருக்கிறார்.

யார் அந்த வீரர்கள்? : ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் ஸ்டார்க் தான் அந்த வீரர்கள். அவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் காயம் காரணமாக ஆடவில்லை. நீண்ட காலத்திற்கு பின் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தான் பங்கேற்றனர்.
மேக்ஸ்வெல் பந்துவீச்சு : இதில் ஸ்டார்க் பந்துவீச்சு சுமாராக இருந்தாலும், அவரது பந்துவீசும் விதம் நன்றாக இருந்தது என குறிப்பிட்டார் பாட் கம்மின்ஸ். மேக்ஸ்வெல் பேட்டிங்கில் 5 ரன்களில் ஆட்டமிழந்தாலும், பந்துவீச்சில் 40 ரன்களை கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார். அவரது சிறந்த பந்துவீச்சு இதுதான்.
மார்ஷ் அதிரடி : இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 352 ரன்கள் குவித்தது. இதற்கு முக்கிய காரணம் துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ். அவர்கள் இருவரும் ஓவருக்கு எட்டு ரன்கள் என்ற விகிதத்தில் ரன் குவித்தனர். துவக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் காயத்தால் விலகி இருக்கும் நிலையில், மிடில் ஆர்டர் வீரர் மிட்செல் மார்ஷ் துவக்க வீரராக கலக்கி வருகிறார். அது குறித்து அவர்கள் ஆபத்தான கூட்டணி எனவும் பாட் கம்மின்ஸ் கூறினார்.
என்ன சொன்னார் பாட் கம்மின்ஸ்? : "ஸ்டார்க், மேக்ஸ்வெல்லுக்கு நீண்ட நாள் கழித்து இது சிறப்பான முதல் போட்டி. அவர்கள் கடந்த சில மாதங்களாக விளையாடவில்லை. மேக்ஸ் 40 ரன்களுக்கு 4 விக்கெட்கள் எடுத்தார். ஸ்டார்க் நல்ல விதமாக பந்து வீசினார். எனக்கு இதைவிட சந்தோஷம் இருக்க முடியாது. ட்ராவிஸ் ஹெட் உலகக்கோப்பை தொடங்கும் போது இருக்க மாட்டார். மார்ஷ் - வார்னர் இன்றைய போட்டியில் ஆபத்தான கூட்டணியாக இருந்தது."என்றார் பாட் கம்மின்ஸ்.