பாலக்கல்லே: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் இளம் வீரர் நிஷாங்கா இரட்டை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை தொடர்ந்து ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் ஷாகிடி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இலங்கை அணியின் நிஷாங்கா - ஃபெர்னாண்டோ கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது.

இவர்கள் இருவரும் தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் 8வது ஓவரிலேயே நிஷாங்கா 2 ஃபோர்ஸ், ஒரு சிக்ஸ் அடித்து 19 ரன்களை விளாசினார். இதையடுத்து அதிரடிக்கு திரும்பிய நிஷாங்கா 31 பந்துகளில் அரைசதம் அடிக்க, மறுபக்கம் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 55 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். 21 ஓவர்கள் முடிவிலேயே இலங்கை அணி 158 ரன்களை விளாசியது.
முதல் விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ஃபெர்னாண்டோ 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான நிஷாங்கா 88 பந்துகளில் சதம் ஆடித்து அசத்தினார். இதையடுத்து ஆட்டத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் நிஷாங்கா எடுத்து கொண்டார். 40 ஓவர்கள் வரை தரையோடு பவுண்டரி அடித்து வந்த நிஷாங்கா, 40வது ஓவருக்கு பின் சிக்சர்களை விளாச தொடங்கினார். இதனால் 116 பந்துகளிலேயே 150 ரன்களை கடந்தார்.
இதனால் இரட்டை சதம் விளாசுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கடைசி ஒவரின் 2வது பந்தில் பவுண்டரி விளாசிய நிஷாங்கா, இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார். இதன் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அதுமட்டுமல்லாமல் இலங்கை ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரான ஜெயசூர்யாவின் 189 ரன்களை சாதனையையும் நிஷாங்கா முறியடித்துள்ளார். 24 ஆண்டுகளுக்கு பின் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. கடைசி வரை சிறப்பாக ஆடிய நிஷாங்கா 139 பந்துகளில் 20 ஃபோர்ஸ், 8 சிக்ஸ் உட்பட 210 ரன்களை சேர்த்து அசத்தினார். இதன் மூலம் இலங்கை அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 381 ரன்களை குவித்துள்ளது.