ஹம்பந்தோடா: இலங்கைக்கு எதிரான 2-வது யூத் டெஸ்ட் போட்டியில் பவன் ஷா 282 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் புரிந்தார். மேலும் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்தார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்டில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 21 ரன்களில் வென்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹம்பந்தோடாவில் நேற்று துவங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 613 ரன்கள் எடுத்தது.
துவக்க ஆட்டக்காரர் அதர்வா தைடே 172 பந்துகளில் 20 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 177 ரன்கள் எடுத்தார். 18 வயதாகும் பவன் ஷா 332 பந்துகளில் 33 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 282 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், இளைஞர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்தார் ஷா. மேலும் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரரானார்.
ஆஸ்திரேலியாவின் கிளின்டன் பீகே ஆட்டமிழக்காமல் 304 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். பவன் ஷா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இளைஞர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்தியர்கள் பட்டியலில் 220 ரன்களுடன் தன்மே ஸ்ரீவத்சவா இரண்டாவது இடத்தில் உள்ளார். கவுதம் கம்பீர் 212, சத்தேஸ்வர் புஜாரா 211, அபினவ் முகுந்த் 205 ரன்கள் எடுத்துள்ளனர்.