சண்டிகர்: பிரப்சிம்ரன் சிங்கின் தந்தை சுர்ஜித் சிங்கிற்கு 2 கிட்னிகளும் செயலிழந்துவிட்ட நிலையில், வாரத்திற்கு 3 முறை டயாலிஸில் போடப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. தந்தையின் உடல்நிலை குறித்த சோகம் இருந்தாலும், கிரிக்கெட் என்று வந்துவிட்டால் பிரப்சிம்ரன் சிங் சிறப்பாக விளையாடி வருவது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் ஆட்டம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த சீசனில் 11 போட்டிகளில் 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 15 புள்ளிகள் பெற்று 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இன்னும் ஒரு போட்டியில் வென்றாலே, பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி செய்யப்படும். இதன் மூலமாக 10 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

பஞ்சாப் அணியின் இந்த சாதனைக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சி மற்றும் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் திட்டமிடல் முக்கிய காரணமாக இருந்தாலும், தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங்கின் ஆட்டமும் முதற்காரணமாக அமைந்துள்ளது. 11 இன்னிங்ஸில் ஆடியுள்ள பிரப்சிம்ரன் சிங் 4 அரைசதம் உட்பட 437 ரன்களை விளாசி இருக்கிறார்.
மைதானத்தின் 360 டிகிரி முழுவதும் பிரப்சிம்ரன் சிங் ஷாட்களை விளையாடுவது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது. இதனிடையே பிரப்சிம்ரன் சிங்கின் தந்தை சுர்ஜித் சிங்கின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. சுர்ஜித் சிங்கிற்கு இரு கிட்னிகளும் செயலிழந்துள்ள நிலையில், வாரத்திற்கு 3 முறை டயாலிஸுஸ் போடப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து பிரப்சிம்ரன் சிங்கின் சகோதரர் சத்விந்தர்பால் சிங் பேசுகையில், பிரப்சிம்ரன் சிங் விளையாடுவதை பார்க்கும் போதெல்லாம் அவர் சிரித்து கொண்டே இருக்கிறார். அவரின் உடலில் ஏராளமான பிரச்சனைகளும், வலிகளும் உள்ளது. இப்படியொரு சூழலில் அவரை பார்ப்பதே எங்களுக்கு சோகம் அளிக்கிறது.
டயாலிஸிஸ் போடுவதற்காக வாரத்திற்கு 3 முறை மருத்துவர்கள் வருகிறார்கள். அந்த நேரத்தில் என் தந்தை வலியில் இருப்பதை பார்க்க முடியாமல், உடனடியாக வீட்டில் இருந்து வெளியேறிவிடுகிறேன். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறோம். பஞ்சாப் கிங்ஸ் விளையாடும் அத்தனை போட்டிகளையும் தந்தை பார்த்து கொண்டிருக்கிறார்.
பிரப்சிம்ரன் சிங் ரன்கள் சேர்க்கும் போதெல்லாம், அவர் தனது வலியை மறந்துவிடுகிறார். அதேபோல் அவர் மோசமான ஷார்ட் ஆடும் போது, தந்தை உணர்ச்சி வேகத்தில் கத்திவிடுகிறார் என்று தெரிவித்தார். தந்தையின் சூழல் குறித்து முழுமையாக அறிந்திருந்த போது, அதனை ஓரமாக வைத்துவிட்டு பிரப்சிம்ரன் சிங் அசத்தலாக விளையாடி வருவது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.