தரம்சாலா: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக 12 ஆண்டுகளுக்கு பின் தரம்சாலா மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல்முறையாக வென்று புதிய சாதனையை படைத்துள்ளது. இதன் மூலமாக புள்ளிப் பட்டியலில் 15 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
ஐபிஎல் தொடரின் 54வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 236 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய பிரப்சிம்ரன் சிங் 48 பந்துகளில் 91 ரன்களை விளாசி அசத்தினார்.

இதன்பின் லக்னோ அணி தரப்பில் எய்டன் மார்க்ரம் - மிட்சல் மார்ஷ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரிலேயே பந்து ஏடாகூடமாக ஸ்விங்காக ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் மிட்சல் மார்ஷ் தூக்கியடிக்க, பந்து அதிக உயரத்திற்கு பறந்தது. அதனை சரியாக கணித்து நேஹல் வதேரா கேட்ச் பிடித்து அசத்தினார்.
இதனால் மிட்சல் மார்ஷ் டக் அவுட்டாகி வெளியேற, தொடர்ந்து அதே ஓவரில் எய்டன் மார்க்ரம் 13 ரன்களில் போல்டாகி பெவிலியன் திரும்பினார். இதனால் பஞ்சாப் அணியின் ஆதிக்கம் தொடங்கியது. பிட்சில் ஸ்விங் இருப்பதை அறிந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், மீண்டும் 3வது ஓவரை வீச அர்ஷ்தீப் சிங்கை அழைத்தார். அந்த ஓவரில் நிக்கோலஸ் பூரனும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் லக்னோ அணி 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் ரிஷப் பண்ட் - ஆயுஷ் பதோனி கூட்டணி களத்தில் இருந்தது. இதில் ரிஷப் பண்ட் அட்டாக் செய்கிறேன் என்று 18 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த மில்லர் 11 ரன்களிலும் வெளியேறினார். இதனால் 10 ஓவர்களில் லக்னோ அணி 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதன்பின் பதோனி - அப்துல் சமாத் கூட்டணி அதிரடியாக விளையாடி சிறிது நேரம் போராடியது. வைஷாக் வீசிய 12வது ஓவரில் மட்டும் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 21 ரன்களை விளாசினர். தொடர்ந்து சாஹல் பவுலிங்கிலும் 2 சிக்ஸ் விளாசப்பட, ஸ்டாய்னிஸ் வீசிய 15வது ஓவரில் 17 ரன்களை குவித்தனர். இவர்களின் பார்ட்னர்ஷிப் 81 ரன்களை எட்டிய போது, அப்துல் சமாத் 45 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆனால் மறுபக்கம் பதோனி 32 பந்துகளில் அரைசதம் அடிக்க, அந்த நேரத்தில் பஞ்சாப் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. கடைசி ஓவரில் பதோனியும் 40 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக பஞ்சாப் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.