தரம்சாலா: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் இளம் நட்சத்திர வீரர் மயங்க் யாதவ் வீசிய 4 ஓவர்களில் மட்டும் 60 ரன்கள் விளாசப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் மயங்க் யாதவ் வீசிய ஒரு பந்தை பிரப்சிம்ரன் சிங் மைதானத்திற்கு வெளியில் சிக்ஸ் அடித்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டவர் மயங்க் யாதவ். முதல் போட்டியிலேயே எளிதாக 156 கிமீ வேகத்தில் பந்துகளை வீசியதால், ரசிகர்களின் பார்வை அவர் பக்கம் திரும்பியது. அவரால் ஒரு ஓவர் முழுக்க 149 கிமீ வேகத்திற்கு மேல் வீச முடிந்தது. அந்த வேகத்துடன் ஸ்விங்கை சேர்த்து மயங்க் யாதவ் பலரையும் ஆட்டிப் படைத்தார்.

உம்ரான் மாலிக்கால் வேகமாக வீச முடிந்தாலும், அவரால் பந்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் மயங்க் யாதவ் பவுலிங்கில் பந்து அவரின் சொல்வதை கேட்டது. அவ்வளவு கட்டுப்பாட்டுடன் துல்லியமாக பவுலிங் செய்தார். இதனை பார்த்த ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித், மயங்க் யாதவை ஆஸ்திரேலியாவில் பார்க்க ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்தார்.
ஆனால் கடந்த சீசனின் போதே மயங்க் யாதவ் காயம் அடைந்தார். இதன்பின் என்சிஏவில் சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருந்த மயங்க் யாதவ், ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதன்பின் ஐபிஎல் தொடர் பாதி முடிவடைந்த நிலையில், லக்னோ அணியுடன் மயங்க் யாதவ் இணைந்தார்.
ஆனால் மயங்க் யாதவ் பழைய மாதிரி வேகத்தில் வீசாமல், இம்முறை வேகத்தை குறைத்து கொண்டார். சராசரியாக 135 கிமீ வேகத்திலேயே அவர் பவுலிங் செய்து வருகிறார். இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் மயங்க் யாதவ் வீசிய 4 ஓவர்களில் மட்டும் 60 ரன்கள் விளாசப்பட்டுள்ளது.
அதிலும் இவரது பவுலிங்கில் மட்டும் 6 சிக்ஸ், 3 பவுண்டரி அடிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் 17வது ஓவரை வீசிய போது, பிரப்சிம்ரன் சிங் அடித்த ஒரு சிக்ஸ் மைதானத்தை விட்டு வெளியில் சென்றது. அதனை பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா ஓஓஓஓ... என்று வியந்து பார்த்து கொண்டிருந்தார். இதனால் மயங்க் யாதவ் பழைய மாதிரி 150 கிமீ வேகத்தில் பவுலிங் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.