அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை பிளே ஆஃப் சுற்றில் வீழ்த்திய நிலையில், போட்டி முடிந்ததும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனது அணி வீரரான ஷஷாங்க் சிங் கை கொடுக்க வந்தபோது அவரிடம் கோபமாகப் பேசி அனுப்பினார். "என் கண் முன் வராதே" என அவரை ஆவேசமாக கூறினார். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.
ஏன் ஸ்ரேயாஸ் ஐயர் இப்படி நடந்து கொண்டார்? இத்தனைக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற பிறகும் தனது அணி வீரரை அவர் திட்டியது ஏன்? என்று பார்க்கலாம்.

இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 204 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிக் கொண்டிருந்தது. அந்த அணி அதிரடியாக விளையாடும்போதும், கடைசி ஐந்து ஓவர்கள் இருக்கும்போது போட்டி எந்த அணி பக்கம் வேண்டுமானாலும் சாயலாம் என்ற நிலைக்கு இருந்தது. அப்போது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக பேட்டிங் செய்துகொண்டிருந்தார்.
அவரே அந்த அணியின் நம்பிக்கையாக இருந்தார். அப்போது மற்றொருபுறம் அதிரடியாக விளையாடி வந்த நேஹால் வதேரா ஆட்டமிழந்தார். அடுத்து ஆறாம் வரிசையில் ஷஷாங்க் சிங் பேட்டிங் செய்ய வந்தார். அவர் அதிரடி பேட்ஸ்மேன் என்பதால் பஞ்சாப் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.
அப்போது 17வது ஓவரில் ஷஷாங்க் ஒரு ரன் ஓடி வரும்போது மிகவும் சாவகாசமாக ஓடினார். அவர் வேகமாக ஓடி இருந்தால் ரன் அவுட் ஆவதில் இருந்து தப்பி இருக்கலாம். ஆனால் நிதானமாக ஓடி ரன் அவுட் ஆனார். அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி உற்சாகமடைந்தது. அதுவரை அந்த அணிக்கு இருந்த அழுத்தம் சற்று நீங்கியது.
ஐந்து விக்கெட்டுகள் இழந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. அதற்கு அடுத்த ஓவரை பும்ரா வீசியதால் மேலும் அழுத்தம் அதிகரித்தது. அந்த ஓவரில் பஞ்சாப் அணியால் எட்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் 19வது ஓவரிலேயே அதிரடியாக நான்கு சிக்ஸர்களை அடித்து வெற்றி இலக்கை எட்டச் செய்தார். அதன்மூலம் 19வது ஓவரிலேயே பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஷஷாங்க் செய்த தவறு பஞ்சாப் கிங்ஸ் அணியை நிச்சயம் தோல்வியை நோக்கி தள்ளி இருக்கும். ஸ்ரேயாஸ் ஐயர் உறுதியுடன் நின்று போட்டியை தன் கையில் எடுத்து 19வது ஓவரில் நான்கு சிக்ஸர்களை அடித்தார். அது மட்டும் நடக்கவில்லை என்றால், இந்தப் போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சாதகமாக மாறி இருக்கும்.
இந்த நிலையில் தான் போட்டி முடிந்தவுடன் ஸ்ரேயாஸ் ஐயர் சற்று கோபத்துடனே இருந்தார். இரண்டு அணி வீரர்களுக்கும் கை குலுக்கிக்கொண்டு வந்த அவர், ஷஷாங்க் சிங்கை பார்த்தவுடன் "என் கண் முன் வராதே.. இங்கிருந்து போ" என்று ஆவேசமாக சத்தம் போட்டார். ஸ்ரேயாஸ் ஐயர் போட்டிகளுக்குப் பிறகு ஆவேசமாக நடந்து கொள்வது முதல் முறை அல்ல. எனினும் அவர் போட்டியில் நடந்த சம்பவத்திற்காக மட்டுமே இவ்வாறு தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வருகிறார்.