முல்லான்பூர்: 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அதன் பின் பேசிய அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தான் வீசிய மோசமான பவுலிங்கை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் தான் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தியிருந்தார். மேலும், நான்கு ஓவர்களில் 25 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.

அடுத்ததாக பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி ஜோப்ரா ஆர்ச்சரின் முதல் ஓவரிலேயே பிரியன்ஷ் ஆர்யா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்களை இழந்து தடுமாற்றத்தைச் சந்தித்தது. அதன் பின் ரன் ரேட்டை எட்ட முடியாமல் இருபது ஓவர்களில் 155 ரன்கள் மட்டுமே எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்தப் போட்டிக்குப் பிறகு ஆட்டநாயகன் விருதை வென்ற ஜோப்ரா ஆர்ச்சர் தனது முதல் போட்டியில் மிக மோசமான பந்துவீச்சை பதிவு செய்திருந்ததற்கு கிளம்பிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். முன்பு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு ஓவர்களில் 76 ரன்களை விட்டுக் கொடுத்த ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான பந்துவீச்சை பதிவு செய்திருந்தார் ஜோப்ரா ஆர்ச்சர்.
அப்போது அது குறித்து அனைவரும் அவரை விமர்சித்து இருந்தனர். ஆனால் தற்போது சிறப்பாக பந்துவீசி ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் அதற்கு பதிலடி அளித்தார். "இந்த தொடரின் துவக்கத்தில் அந்த மோசமான நிகழ்வு நடந்தது. ஆனால் இப்போது நான் வெற்றிக்காக பங்களிப்பு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்."
"சில நாட்கள் இதுபோல அமையும். அதை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நல்ல நாட்களை நாம் மகிழ்ச்சியுடன் அணுக வேண்டும். மோசமான நாட்களை ஓரங்கட்டி வைக்க வேண்டும். சில சமயம் நமக்கு அதிர்ஷ்டம் இருக்கும். ஒவ்வொருவரும் கடுமையாக பயிற்சி செய்கிறார்கள். ஆனால் எல்லா நாட்களும் நல்ல நாட்களாக அமையாது" என்று தன்னை விமர்சித்தவர்களை சுட்டிக்காட்டி பேசினார் ஜோப்ரா ஆர்ச்சர்.