கராச்சி: பாகிஸ்தான் சூப்பர் லீக் 2026 சீசனில் முல்தான் சுல்தான்ஸ் அணியை தானே நிர்வகிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. வேறு ஒரு உரிமையாளரை தேடுவதற்கு பதிலாக, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்டு அணியின் செயல்பாடுகளைத் தொடர வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த சீசனுக்குப் பிறகு அணி உரிமை ஏலம் விடப்படும்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய PCB தலைவர் நக்வி, "PSL முடிந்தவுடன், நாங்கள் உரிமையாளர் அணியை ஏலம் விடுவோம். அடுத்த எட்டு முதல் பத்து நாட்களுக்குள், அணியை நடத்த ஒரு இடைக்காலத் தலைவரை நியமிப்போம்" என்று தெரிவித்தார். 11வது சீசன் முழுவதும் அணியை நேரடியாக வாரியமே நிர்வகிக்கும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.

முல்தான் சுல்தான்ஸ் அணியின் முன்னாள் உரிமையாளரான அலி தாரீன், கடந்த மாதம் தனது உரிமையாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். PSL நிர்வாகம் லட்சியமும் வெளிப்படைத்தன்மையும் அற்று செயல்படுவதாக அவர் பகிரங்கமாக பலமுறை குற்றம் சாட்டியதன் விளைவாக இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் உருவாகியது.
இதற்குப் பதிலடியாக, PCB, ஒப்பந்த விதிமுறைகளை தாரீன் மீறியதாகக் கூறி அவருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதை திரும்பப் பெறுமாறு கோரியதுடன், பகிரங்க மன்னிப்பு கோரவும் வலியுறுத்தியது. இதற்கு தாரீன், PCB அனுப்பிய அறிவிப்பை கிழித்துப் போடும் கேலிக்குரிய "மன்னிப்பு" வீடியோவை வெளியிட்டு பதிலளித்தார்.
இதனை தொடர்ந்து, 11வது சீசனுக்கான கலந்துரையாடல்களில் இருந்து தாரீன் படிப்படியாக ஒதுக்கப்பட்டு, உரிமையாளர் புதுப்பித்தல் சலுகைக் கடிதம் பெறாத ஒரே உரிமையாளராக இருந்தார். PCB தலைவர் அல்லது PSL நிர்வாகத்திடம் இருந்து எந்தவித தகவல்தொடர்புகளுக்கும் சுல்தான்ஸ் அணிக்கு எந்த பதிலும் வரவில்லை என்று கடந்த வாரம் தெரிவித்த தாரீன், சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக கூறினார்.
இதற்கு பதில் அளித்துள்ள நக்வி, "துரதிர்ஷ்டவசமாக என்ன நடந்தது என்பது பற்றி நான் விவாதிக்க விரும்பாத ஒரு பிரச்சினை. ஆனால் அலி மீண்டும் வந்தால் நாங்கள் நிச்சயமாக வரவேற்போம். புதிய அணியை வாங்க அவர் விரும்பினால், அவர் எல்லா வகையிலும் ஏலத்தில் பங்கேற்கலாம்" என்று குறிப்பிட்டார்.
ஒரு அணியை PCB நேரடியாக நிர்வகிப்பது PSL வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத நிகழ்வாகும். PSL தொடரின் தொடக்க தேதியும் மாற்றப்படலாம் என தெரிகிறது. மார்ச் 26 முதல் மே 3 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மார்ச் 23 அன்று தொடங்குவதற்கு நக்வி விருப்பம் தெரிவித்தார். மார்ச் 23 பாகிஸ்தான் தினம் என்பதால், அந்நாட்டில் ஒரு பொது விடுமுறை நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வசிம் அக்ரம் PSL விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் நக்வி அறிவித்தார். அக்ரம் இதற்கு முன்னர் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் பணிகளில் பணியாற்றியுள்ளார்.