பிஎஸ்எல் போட்டித் தொடர்
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தனது பிஎஸ்எல் போட்டிகளை தள்ளிப் போட்டுள்ளது. இந்தத் தொடரில் இதுவரை சுற்றுப் போட்டிகள் அனைத்தும் முடிந்து விட்டன. அரை இறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி மட்டுமே பாக்கி உள்ளது. இன்று அரை இறுதிப் போட்டிகள் தொடங்குவதாக இருந்தன.
நாக் அவுட் போட்டிகள் தள்ளிவைப்பு
இந்த நிலையில் தற்போது நாக் அவுட் போட்டிகள் தள்ளி வைக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நாக் அவுட் போட்டிகள் தள்ளி வைக்கப்படுவதாகவும், மறு போட்டிகள் எப்போது நடைபெறும் என்று விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஆளே இல்லாமல் நடந்த சுற்றுப் போட்டிகள்
சுற்றுப் போட்டிகள் ரசிகர்களே இல்லாமல்தான் இதுவரை நடைபெற்று வந்தன. காலியான மைதானங்களில் போட்டிகளை நடத்தி வந்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏன் இப்படி ரசிகர்களே இல்லாமல் கடமைக்கு நடத்துகிறீர்கள். ரத்து செய்யுங்கள் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இந்த நிலையில் தற்போது நாக் அவுட் போட்டிகளை தள்ளிப் போட்டுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
ஐபிஎல்லைப் போலவே தள்ளிப் போடப்பட்டது
இந்தியாவிலும் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா மிரட்டல் காரணமாக இப்போட்டிகளை ஏப்ரல் 15ம் தேதிக்கு பிசிசிஐ தள்ளி வைத்துள்ளது. இந்தியா -தென்னாப்பிரிக்கா தொடரும் கூட ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆனால் பாகிஸ்தானில் படு தாமதமாக நாக் அவுட் போட்டிகள் வரை கொண்டு வந்து விட்டு இப்போது தள்ளிப் போட்டுள்ளனர்.