கராச்சி: 2025 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டி துபாயில் நடைபெற்றது. இருப்பினும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற இந்திய அணி மறுத்துவிட்டது.
இந்தப் போட்டி முடிந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.இன்னும் கோப்பை வெற்றி பெற்ற அணிக்கு தரப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து நக்வி மீண்டும் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு கோப்பை வேண்டும் என்றால், அதன் கேப்டன் துபாய் வந்து தன்னிடமிருந்து அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய நக்வி, "கோப்பை வழங்குவதில் ஒரு முட்டுக்கட்டை நிலை உள்ளது. இந்தியாவிற்கு கோப்பை தேவைப்பட்டால், அதன் கேப்டனை துபாய்க்கு அனுப்பி, என்னிடமிருந்து அதைப் பெற வேண்டும்," தெரிவித்தார்.ஆசியக் கோப்பை தொடரின்போது நடந்த கைகுலுக்கல் சர்ச்சைகளும் இந்தப் பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்தின.
இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் வீரர் சல்மான் அகாவுடன் டாஸின்போதும், மூன்று போட்டிகளுக்குப் பிறகும் கைகுலுக்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்வதேச போட்டிகளில் எதிரணி வீரர்களுடன் கைகுலுக்குவது ஒரு பொதுவான பழக்கமாகும். இதனை இரு அணிகளும் செய்யவில்லை
இதனை தொடர்ந்து நவம்பரில் இலங்கையில் நடந்த பெண்கள் உலகக் கோப்பை, அதே மாதத்தில் தோஹாவில் நடந்த ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை மற்றும் இந்த மாதம் துபாயில் நடந்த அண்டர்-19 ஆசியக் கோப்பை போன்ற போட்டிகளிலும் இந்திய அணிகள் இதே போக்கை கடைப்பிடித்தன. இந்த சம்பவம், இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து நிலவிவரும் பதட்டங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
கைகுலுக்கல் விவகாரம் தொடர்பாக எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்று மொஹ்சின் நக்வி திட்டவட்டமாகக் கூறியுள்ளார். "எங்கள் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க அனுமதியளிக்காவிட்டால், அதே மாதிரியான பதிலடி கொடுக்கப்படும். எந்தச் சமரசமும் செய்யப்படாது. அவர்களுடன் கைகுலுக்க எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை.ஜூனியர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய ஜூனியர் வீரர்களின் நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுதொடர்பாக இந்திய அண்டர் 19 கேப்டன் ஆயுஷ் மாத்ரே மீது ஐசிசியிடம் புகார் தெரிவித்து நாங்கள் ஒரு கடிதம் எழுதுவோம்," என்று அவர் கூறினார்.