டெல்லி : பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ஜாகா அஷ்ரப் இந்தியாவை எதிரி நாடு என கூறி இருக்கிறார்.
இதை மற்ற சமயத்தில் கூறி இருந்தால் யாரும் இதை பெரிதாக எடுத்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். ஆனால், இந்தியா வந்திருக்கும் பாகிஸ்தான் அணிக்கு அவர்களே பாராட்டும் அளவுக்கு வரவேற்பு அளித்த பின் இப்படி பேசி இருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

2023 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் பாகிஸ்தான் அணி கிரிக்கெட் ஆட உள்ளது.
என்னதான் இந்தியா - பாகிஸ்தான் இடையே அரசியல் ரீதியான, ராணுவ ரீதியான பிரச்சனைகள் இருந்தாலும், ஹைதராபாத்தில் பாகிஸ்தான் அணிக்கு தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் வீரர்களே தங்கள் வாழ்வில் இப்படி ஒரு வரவேற்பை கண்டதில்லை என புகழ்ந்து இருந்தார்கள்.
அதை கண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள், இந்த முறை உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை சுற்றி எந்த சர்ச்சையும் வராது, போட்டிகள் சிக்கலின்றி நடக்கும் என எண்ணிய நிலையில், அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பே இடையூறை ஏற்படுத்தும் வேலையை செய்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ஜாகா அஷ்ரப் சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்தை உயர்த்திக் கொடுத்தார். அதைப் பற்றி பாகிஸ்தானில் ஒரு விழாவில் தற்பெருமையாக பேசிய அவர், பேச்சின் இடையே "எதிரி நாட்டிலோ, அல்லது வேறு நாட்டிலோ சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்" என குறிப்பிட்டார்.
அவர் எதிரி நாடு என குறிப்பிட்டு இருப்பது இந்தியாவைத்தான். பாகிஸ்தான் வீரர்களை இந்தியா சிறப்பாக வரவேற்ற பின் அவர் இப்பத் இபேசி இருப்பது பாகிஸ்தான் வீரர்களுக்கு தான் சிக்கலை ஏற்படுத்தும். அதை அவர் உணர்ந்தாரா? இல்லையா? என்பதே தெரியவில்லை.
ஜாகா அஷ்ரப் பேச்சுக்கு இப்போதே பலரும் கொந்தளிக்கத் துவங்கி விட்டனர். சமூக ஊடகங்களில் இந்திய ரசிகர்கள் பலர் ஜாகா அஷ்ரப் மரியாதை தெரியாத நபர் என கூறி வருகின்றனர். பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் அவர் பேசியதற்கு நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம் எனவும் பதிவிட்டு ஒற்றுமைக்கு பாலமாக இருக்க முயல்கின்றனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர், இந்தியாவும், பாகிஸ்தானும் எதிரி நாடு தானே, அவர் பேசியதில் ஒன்றும் தவறில்லை என அதை கடந்து செல்வதையும் பார்க்க முடிகிறது.