லாகூர்: இந்தியாவுக்கு எதிராக பின்வாங்க போவதில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாகிஸ்தான் அணி வென்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியை அடுத்து, இந்திய அணியின் கைகுலுக்க மறுக்கும் கொள்கைகளுக்குச் சமமான பதிலடி தரப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இரு நாட்டு கிரிக்கெட் உறவுகளில் நிலவும் பதற்றம் இதன் மூலம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான சோசின் நக்வி, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றுகிறார். கிரிக்கெட்டையும் அரசியலையும் தனித்தனியாகப் பார்க்குமாறு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன்னிடம் வலியுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் அணுகுமுறைக்கு பாகிஸ்தான் அணிகள் தக்க பதிலடி கொடுக்கும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

செப்டம்பர்-அக்டோபரில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய சீனியர் வீரர்களால் கைகுலுக்கல் இனி இல்லை என்ற கொள்கை கடைபிடிக்கப்பட்டது. இதனை தற்போது இந்திய ஜூனியர் வீரர்களும் கடைப்பிடிக்கின்றனர். அண்டர் 19 போட்டியில் கூட இந்திய வீரர்களும், பாகிஸ்தான் வீரர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், லாகூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், நக்வி தனது நிலைப்பாட்டை விளக்கினார். "எங்கள் நிலைப்பாடு இன்றும் மாறவில்லை. நம்புங்கள், அரசியலை இதில் கொண்டு வர வேண்டாம் என்று பிரதமர் என்னிடம் இரண்டு முறை கூறியுள்ளார். கிரிக்கெட்டும் அரசியலும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அன்று பாக் அண்டர் 19 பயிற்சியாளர் சர்பராஸ் சொன்னது போல என்ன மாதிரியான அணுகுமுறை இருந்தது என்று உங்களுக்கே தெரியும்."
"அவர்கள் கைகுலுக்க விரும்பவில்லையென்றால், நாங்களும் அப்படி விரும்புவதில்லை. எது நடந்தாலும், இந்தியாவுக்குச் சமமாகவே நடக்கும். எங்கள் அணுகுமுறை தொடரும். அவர்களால் ஒரு காரியம் செய்துவிட்டு, நாங்கள் பின்வாங்குவது சாத்தியமில்லை; அது நடக்கவே நடக்காது," என்று நக்வி உறுதியாகத் தெரிவித்தார்.
நக்வி சர்ச்சைகளுக்குப் புதிதல்ல. சீனயர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, இந்திய வீரர்கள் அவரிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்த நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான நக்வி, கோப்பையுடன் சென்றுவிட்டார். அந்தக் கோப்பையை அவர் இன்னும் விடுவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், 19 வயதுக்குட்பட்டோருக்கான இறுதிப் போட்டியில், அவர் இளம் பாகிஸ்தான் அணியினருக்குக் கோப்பையை வழங்கியதுடன், அவர்களுடன் சேர்ந்து வெற்றியைக் கொண்டாடினார். இந்திய அண்டர் 19 வீரர்கள் ரன்னர் அப்பிற்கான பதக்கங்களை அவரிடம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.