சாத்தியமில்லாத சூழல்
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை டி20 உலக கோப்பை தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த தொடரை நடத்த முடியாத சூழலில் உள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தொடர்ந்து தெரிவித்து வருகிறது. கொரோனா காரணமாக ஆஸ்திரேலியாவில் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக டி20 உலக கோப்பை தொடரை நடத்த முடியாத சூழல் அங்கு நிலவுகிறது.
பயணக்கட்டுப்பாடுகள்
கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள சூழலில் பல்வேறு நாடுகளிலும் பயணக்கட்டுப்பாடுகள் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் இயர்ல் எட்டிங்ஸ், இத்தகை யநெருக்கடி சூழலில் 16 அணிகளை ஒரே இடத்தில் வைத்து டி20 உலக கோப்பையை நடத்துவது சாத்தியப்படாது என்று தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகம் ரிஸ்க் எடுக்காது
இதே கருத்தையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஈசான் மணியும் தற்போது கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில் டி20 உலக கோப்பையை நடத்தும் ரிஸ்க்கை கிரிக்கெட் உலகம் எவ்வாறு மேற்கொள்ளும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வரும் 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பை தொடர் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இடைப்பட்ட காலங்களில் இந்த ஆண்டின் உலக கோப்பை நடத்தப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சுகாதாரத்தை பேண முடியாது
எவ்வாறாகிலும் ரசிகர்கள் இல்லாத மைதானங்களில் மட்டுமே இந்த தொடர் நடத்தப்பட வேண்டிய சூழல் உள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ள மணி, 16 அணிகளை ஒரே இடத்தில் கொண்டு சுகாதார முறையில் இந்த போட்டிகளை நடத்துவது சாத்தியப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த தொடர் குறித்து முடிவெடுக்க கடந்த வாரத்தில் கூடிய ஐசிசி உறுப்பினர்கள், இதன் முடிவை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.