டெல்லி: சிவசேனா எதிர்ப்புக்கு நடுவே, டெல்லியில் இன்று ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லாவை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகர்யார் கான் சந்தித்து பேசினார். இருப்பினும், இது அதிகாரப்பூர்வமற்ற ஒரு சந்திப்பு எனவும், இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது குறித்து பிசிசிஐ தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தினால்தான் முடிவு தெரியும் என்றும் இருவரும் கூறினர்.
தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதோடு, எல்லையில் அத்துமீறும், பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்தியா-பாகிஸ்தான் நடுவேயான கிரிக்கெட் போட்டிகளை நடத்த இந்திய அரசு தடைபோட்டு வைத்துள்ளது. இதன்நடுவே, ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி இவ்விரு நாடுகளும் வரும் டிசம்பரில் கிரிக்கெட் போட்டித்தொடரில் பங்கேற்க அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்த சிக்கலை பேசி தீர்க்க பிசிசிஐ ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் மும்பையிலுள்ள பிசிசிஐ அலுவலகத்திற்குள் புகுந்த சிவசேனா தொண்டர்கள் கடும் போராட்டம் நடத்தியதால், பேச்சுவார்த்தை கைவிடப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில், ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லாவை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகர்யார்கான் இன்று திடீரென சந்தித்து பேசினார். இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய ராஜிவ்சுக்லா, "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது பற்றி நாங்கள் பேசவில்லை. அதில் பிசிசிஐ தலைவர்தான் முடிவெடுக்க வேண்டியவர்" என்று கூறினார். இதே கருத்தை ஷகர்யார் கானும் எதிரொலித்தார்.