இஸ்லாமாபாத்: உலககோப்பை 20 ஓவர் போட்டியில் பங்கேற்க இந்தியா வரும் பாகிஸ்தான் வீரர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்காவிட்டால் போட்டியில் இருந்து வெளியேற நேரிடலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இருவது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 8-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் உள்ள 7 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 19-ந்தேதி தரம்சலாவில் நடக்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்கள் மத்தியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை இந்தியாவில் விளையாட அனுமதிக்கக்கூடாது என்ற முழக்கங்களும் அவ்வப்போது எழுந்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் உலககோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இமாச்சல பிரதேசம் தரம்சலா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை இங்கு நடத்தக்கூடாது வேறு இடத்துக்கு மாற்றம் வேண்டும் என்று அம் மாநில முதல்வர் வீரபத்ரசிங் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் தரம்சலா ஸ்டேடியம் அருகே தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் நினைவிடம் உள்ளது. இதனால் பாகிஸ்தான் அங்கு விளையாடுவது பலியான வீரர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அமையும் எனவே அங்கு போட்டியை நடத்த வேண்டாம் என்று அம்மாநில காங்கிரசும், பா.ஜ.க.வும் கூறி வருகின்றன.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கான் "இது எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானை தனியாக குறிவைத்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இமாச்சலப் பிரதேச முதல்வர் இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இது குறித்து தினந்தோறும் ஐ.சி.சி.-யுடன் நாங்கள் பேசி வருகிறோம். இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எங்கள் வீரர்களின் பாதுகாப்பு தொடர்பாக உத்திரவாதம் அளிக்க வேண்டும். இல்லையேன்றால் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேற நேரிடலாம்" என்று தெரிவித்துள்ளார்.