மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் வாரியம் தாங்கள் நடத்தும் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமைகளை பெரிய அளவில் விற்று தான் லாபம் பார்த்து வருகின்றன. இந்த சூழலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தாங்கள் நடத்தும் பி எஸ் எல் தொடர் மூலம் தற்போது லாபம் ஈட்டி வரும் நிலையில் பிசிசிஐ எதிர்த்து செயல்பட்டு வருவதால் தற்போது அடி பாதாளத்திற்கு சென்றிருக்கிறது.
சாம்பியன்ஸ் லீக் தொடர் தற்போது பாகிஸ்தானில் நடக்க இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க வரமாட்டோம் என்று இந்தியா அறிவித்துள்ள நிலையில், இந்தியா வரவில்லை என்றால் தொடரை விட்டு விலகி சொல்லுங்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

அது மட்டுமில்லாமல் ஐபிஎல் தொடர் நடைபெறும் சமயத்தில் வேண்டுமென்றே பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை நடத்தி பிரச்சனை கொடுக்க வேண்டும் என அந்நாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் கடுப்பான பிசிசிஐ, பாகிஸ்தானுக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறது.
குறிப்பாக பாகிஸ்தானில் நடக்கும் போட்டிகளை இந்திய ரசிகர்கள் அதிக அளவு பார்ப்பார்கள். அரசியல், மதம் என அனைத்து வேறுபாடுகளையும் கடந்து பாகிஸ்தானில் நடக்கும் போட்டிகளை இந்திய ரசிகர்கள் ஆதரிப்பார்கள். இந்த சூழலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதால் அதற்கு ஜெய்ஷா முதலில் செக் வைத்து விட்டார்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஒளிபரப்பு செய்ய எந்த ஒரு இந்திய ஊடகங்களும் முன்வரவில்லை. இதனால் பாகிஸ்தான் வங்கதேச போட்டி இந்தியாவில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்று டெஸ்ட் போட்டியில் கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது.
இந்த போட்டியை ஒளிபரப்பு செய்ய இதுவரை எந்த ஒரு நிறுவனமும் முன்வரவில்லை. குறிப்பாக இங்கிலாந்து விளையாடும் போட்டியை பிரிட்டனில் உள்ள ஸ்கை ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் ஒளிபரப்பு செய்யும். ஆனால் தற்போது அந்த நிறுவனம் கூட இந்த போட்டியை ஒளிபரப்பு செய்ய முன்வரவில்லை. இதற்கு பின்னால் பிசிசிஐ தான் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் 2024 முதல் 2026 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானில் நடைபெறும் 11 டெஸ்ட், 26 ஒரு நாள் போட்டி மற்றும் 24 டி20 போட்டிகளை 96 கோடி ரூபாய்க்கு விற்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்து வந்தது. ஆனால் தற்போது 45 கோடி ரூபாய்க்கு தான் இந்த உரிமம் விற்கப்பட்டு இருக்கிறது என்ற செய்திகள் வெளியாகி உள்ளது.
இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நஷ்டம் என்று சொல்லப்படுகிறது. எனினும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்று கூறும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கடந்த சைக்கிளில் தாங்கள் விற்றதை விட அதிகமாக தான் தற்போது கிரிக்கெட் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமத்தை விற்று இருப்பதாக அந்த கிரிக்கெட் வாரியம் கூறுகிறது.