ராஞ்சி: தமது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்க காலங்களில் ராஞ்சி என்றால் பொதுவாக கராச்சி என்றே புரிந்து கொண்டனர் என்று கேப்டன் டோணி கூறியுள்ளார்.

ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் டோணி பேசியதாவது:
எனது முதல் போட்டிக்கு முன்பாக நான் கென்யாவில் இருந்தேன், நான் அங்கு ஒரு சதம் எடுத்தவுடன் ரசிகர்கள் என்னிடம் நான் எந்த ஊர் என்று கேட்டனர். நான் ராஞ்சி என்றேன், உடனே நாடு பிரிக்கப்பட்டப் பிறகு என் பெற்றோர்கள் இங்கு வந்து விட்டனரா என்று கேட்டனர்.
அவர்கள் ராஞ்சியை கராச்சி என்று நினைத்தனர். நான் உடனே கராச்சி அல்ல ராஞ்சி என்றேன். அதன் பின்னர் வேறு அதிகமாக பேசவில்லை.
நான் எந்த ஒரு அயல்நாட்டு வீரருடன் பேசும்போதும் ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் உள்ள இந்த மைதானத்தை அவர்கள் வானளாவப் புகழ்ந்து பேசியிருக்கின்றனர்.
இந்தியாவில் சிறந்த மைதானம் என்று அவர்கள் கூறினர். உலகின் டாப் 2 மைதானங்களில் ராஞ்சி மைதானத்திற்கு இடம் உண்டு. முதன் முதலாக நான் இந்த ஸ்டேடியத்தைப் பார்வையிட்டபோது இது இந்த அளவுக்கு பிரமாதமாக வரும் என்று நினைக்கவில்லை.
இவ்வாறு டோணி கூறினார்.