சென்னை : இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்க்கும் ஆவலில் பெரும்பாலான மக்கள் டிவி முன்பு அமர்ந்திருந்ததால், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், இன்று பி பிரிவில் உள்ள இந்தியாவும், பாகிஸ்தானும் மோதிக் கொண்டன. உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தைப் போன்ற எதிர்பார்ப்பு இப்போட்டிக்கு மக்களிடையே இருந்தது. டிக்கெட் விற்பனை தொடங்கிய 20 நிமிடங்களிலேயே முடிந்து போனதே இதற்கு ஒரு உதாரணம்.

இப்போட்டியை நேரில் காண இயலாத மக்களுக்கு வரப்பிரசாதமாக டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதிலும், இம்முறை தமிழிலும் வர்ணனை செய்யப்பட்டது. எனவே, பெரும்பாலான மக்கள் டிவி முன்னதாகவே இன்றைய பொழுதைக் கழித்தனர்.

பொதுவாக விடுமுறை தினங்களில் சாலையில் காணப்படும் போக்குவரத்து இன்று காணப்படவில்லை. சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இதேபோன்று, தொழில் மற்றும் இன்னபிற காரணமாக வெளியில் சென்றிருந்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆங்காங்கே உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் டி.வி.க்களில் இந்த கிரிக்கெட் போட்டியை கண்டு கழித்தனர்.

விறுவிறுப்பாக சென்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் முடிவில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆங்காங்கே பலர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.