மும்பை: இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் விமர்சனங்கள், ட்ரால்கள் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக் கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் அணியின் இளம் வீரரான ரியான் பராக், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ரியான் பராக் மீதான விமர்சனங்கள் ரசிகர்களிடையே அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல் களத்தில் சிக்சர் அடித்துவிட்டு நடனமாடுவது, கேட்ச் பிடித்துவிட்டு கொண்டாடுவது, ஸ்லெட்ஜிங் செய்வது என்று ரியான் பராக்கின் குணாதிசியங்களும் விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில் தியோதர் டிராபியில் ரியான் பராக் சிறப்பான கம்பேக்கை கொடுத்துள்ளார். ஐந்து போட்டிகளில் 354 ரன்கள் குவித்துள்ள ரியான் பராக், தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்த நிலையில் ரியான் பராக் பேசுகையில், நான் ஒரு பூமர் சாப்பிட்டால், சட்டை காலரை தூக்கிட்டால், கேட்ச் பிடித்து ஆர்ப்பரித்தால் கூட ரசிகர்களுக்கு கோபம் வருகிறது. இவ்வளவு ஏன் கோல்ஃப் விளையாடினால் கூட அவர்களுக்கு பிடிக்காது.
எனக்கு தெரிந்து ரசிகர்களிடம் கிரிக்கெட் வீரர்கள் பற்றி பொதுபுத்தி ஒன்று உள்ளது. ஒரு கிரிக்கெட் வீரர் என்றால் டீஷர்ட்டை டக்-இன் செய்திருக்க வேண்டும், காலரை இறக்கவிட்டிருக்க வேண்டும், அனைவரிடமும் மரியாதையுடன் நடக்க வேண்டும், யாரையும் ஸ்லெட்ஜிங் செய்யக் கூடாது என்று பொதுபுத்தி உள்ளது. ஆனால் அந்த பொதுபுத்திக்கு எதிராக நான் இருக்கிறேன். அதன் காரணமாகவே ரசிகர்கள் என்னை வெறுக்கிறார்கள்.

இதனால் தான் சமூக வலைதளங்களில் என் மீதான ட்ரால்கள், விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. ஆனால் அதைப் பற்றி சிந்திப்பதை நிறுத்த அதிக நாட்களாகிவிட்டது. ஒரு கட்டத்தில் நான் என்ன செய்தாலும் விமர்சனங்கள் வரும் என்று தெரிந்துவிட்டது. அதனால் விமர்சனங்களுக்கு மதிப்பளிப்பதில்லை. இதுநாள் வரையில் என்னிடம் நேரடியாக வந்து யாரும் இதுதான் பிரச்சனை என்று யாரும் கூறியதே இல்லை.
தியோதர் டிராபி தொடரில் எனது ஆட்டத்தை பார்த்த பின், பலரும் எனது திறமையை பாராட்டுகிறார்கள். ஆனால் அடுத்த இரு போட்டிகளில் சொதப்பினால், மீண்டும் விமர்சனங்கள் அதிகரிக்கும். சமூக வலைதளங்களில் ட்ரால் செய்யப்படுவேன். அதனால் எனக்கு பிடித்த கிரிக்கெட்டை விளையாடுவேன். சோசியல் மீடியாவில் வரும் விமர்சனங்களுக்கு காது கொடுத்து கேட்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.