ரசிகர்கள் அதிர்ச்சி
கடந்த ஒரு ஆண்டுகாலமாக சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இதேபோல கடந்த 2018ல் இருந்து சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் உள்ளார் சுரேஷ் ரெய்னா. இவர்கள் இருவரும் நேற்று மாலை அடுத்தடுத்து தங்களது ஓய்வை சமூகவலைதளம் மூலம் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.
சாக்ஷி தோனி உருக்கம்
தோனியின் ஓய்வையடுத்து சாக்ஷி தோனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். முன்னதாக தோனியின் ஓய்வு அறிவிப்பு வீடியோவிலேயே தன்னுடைய லவ் மற்றும் கைகூப்புதல் எமோஜிகளையும் அவர் கமெண்ட்டில் தெரிவித்திருந்தார். தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள தனிப்பட்ட பதிவில் தோனியின் சாதனைகளால் தான் மிகுந்த பெருமை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உணர்வுகளை மறக்க மாட்டார்கள்
தனிப்பட்ட மனிதனாகவும் தோனி குறித்து தான் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ள சாக்ஷி தோனி, இந்த விளையாட்டை மிகவும் நேசிக்கும் தோனி, இந்த ஓய்வை அறிவிக்கும்போது தன்னுடைய வருத்தத்தை எவ்வாறு மறைத்திருப்பார் என்று தான் உணர்வதாகவும் கூறியுள்ளார். மேலும் மக்கள் நாம் கூறுவதை மறந்து விடுவார்கள், நாம் செய்ததை மறந்துவிடுவார்கள் ஆனால் நாம் ஏற்படுத்திய உணர்வுகளை மறக்க மாட்டார்கள் என்ற மாயா ஆஞ்சலாவின் தத்துவத்தையும் மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் சூரியன் மறைவதை தோனி பார்க்கும்படியான புகைப்படத்தையும் பதிந்துள்ளார்.
பிரியங்கா ரெய்னா பெருமை
இதனிடையே, சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்காவும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தின்மூலம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தான் ரெய்னா குறித்து தனித்துவமான பெருமையால் பூரிப்பதாக பிரியங்கா தெரிவித்துள்ளார். தன்னுடைய மனம் நன்றி மற்றும் மரியாதையால் நிரம்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.