துபாய்: இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
இரு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் தலா 1 போட்டியில் அவ்விரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் விக்கெட்டை கைப்பற்றிய போது இலங்கை வீரரான திசாரா பெரேரா வார்னரை கிண்டல் செய்யும் விதமாக சைகை காட்டி விக்கெட் எடுத்ததை கொண்டாடியுள்ளார். மேலும், ஏதேதோ முனுமுனுத்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, பெரேரா ஒழுங்கு விதிமுறையை மீறி நடந்து கொண்டதாக கூறி பெரேராவின் போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது.
இந்நிலையில் அப்போட்டியின்போது, இலங்கை பேட் செய்தபோது, தனது மூன்றாவது ஓவரை வீசிய ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க், ரன் ஓட முயற்சிக்காத இலங்கை வீரர் சந்திமால் மீது பந்தை எறிந்தார். எனவே ஸ்டார்க்கிற்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.