கொழும்பு: எதிர் அணி பேட்ஸ்மேன்கள் மெத்தனமாக இருக்கும் வேளையில் அவுட் செய்யும் டோணியை போலவே சமயோஜிதமாக செயல்பட்டுள்ளஅார் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பீட்டர் நிவில். ஆனால் இவரது செயல்பாடு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
ஆஸ்திரேலியா - இலங்கை இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் அபாரமாக வென்றுள்ளது. 3வது டெஸ்ட் போட்டியின் 14 ஓவரை எதிர்கொண்ட இலங்கை பேட்ஸ்மேன் கருண ரத்னே, ஆப் ஸ்பின் பந்தை அடிக்க முடியாமல், பந்தை விக்கெட் கீப்பர் பீட்டர் நிவிலிடம் விட்டுவிட்டார்.
அப்போது விக்கெட் கீப்பர் கையில் பந்து இருப்பதை கவனிக்காமல், லேசாக காலை தூக்கிவிட்டு மீண்டும் கிரீசில் நிற்க முற்பட்டார் கருண ரத்னே. ஆனால் அவரது காலையே பார்த்துக்கொண்டிருந்த பீட்டர் நிவில், அவர் காலை சற்று தூக்கிய நேரமாக பார்த்து ஸ்டம்பிங் செய்துவிட்டு, அப்பீல் கேட்டார். ரீப்ளே செய்து பார்த்த 3வது நடுவர், அதை அவுட் கொடுத்தார்.
இதனையடுத்து கருண ரத்னே வெளியேற்றப்பட்டார். பீட்டர் நிவிலின் சமயோஜித ஸ்டம்பிங் காட்சி தற்போது வைரலாகியுள்ளது. அதேநேரம், இது ஏமாற்று வகையிலான அவுட் எனவும் சரச்சை எழுந்துள்ளது. வெகுநேரம் பந்தை கையில் வைத்திருந்துவிட்டு அவர் ஸ்டம்பிங் செய்ததாக குற்றம்சாட்டுவோர் கூறுகிறார்கள். பீட்டர் நிவிலோ இந்த சர்ச்சைகளை புறம் தள்ளியுள்ளார்.