பெங்களூர்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வி அடைந்ததற்கு விராட் கோலி செய்த ஒரு தவறு தான் காரணம் என ஒரு தரப்பு ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். ஃபில் சால்ட் இந்த போட்டியில் அதிரடியாக ஆடி வந்த நிலையில் அவரை விராட் கோலி ரன் அவுட் செய்து விட்டதாக சர்ச்சை எழுந்தது.
அதனால் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிக ரன்களை சேர்க்க முடியாமல் போனதாக ரசிகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்று இங்கு பார்க்கலாம். இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. பில் சால்ட் மற்றும் விராட் கோலி துவக்க வீரர்களாக ஆடினர்.

பில் சால்ட் அதிரடியாக ஆடினார். அவர் 17 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்திருந்தார். மூன்றாவது ஓவரிலேயே அவர் 30 ரன்கள் விளாசி மிரட்டினார். சிறப்பாக ஆடி வந்த நிலையில் நான்காவது ஓவரில் அவர் ஒரு ரன் ஓட முற்பட்டபோது தவறு நடந்து அவர் ரன் அவுட் ஆனார்.
அப்போது அக்சர் படேல் வீசிய நான்காவது ஓவரின் ஐந்தாவது பந்தை பில் சால்ட் கவர் திசையில் அடித்தார். அதன் பின் விராட் கோலியும், பில் சால்ட்டும் ஒரு ரன் ஓடுவதற்காக சில அடிகளை எடுத்து வைத்தனர். ஆனால், பந்தை விப்ரஜ் நிகாம் எடுத்து விக்கெட் கீப்பர் கே.எல். ராகுலை நோக்கி வீசினார்.
அப்போது விராட் கோலி மறுமுனையில் இருந்து சில அடி தூரம் தான் வந்திருந்தார். பில் சால்ட் பிட்ச்சின் நடுப்பகுதிக்கு அருகே இருந்தார். நிச்சயமாக இருவராலும் அந்த ரன்னை ஓடி முடித்திருக்க முடியாது. இருவருமே ஃபீல்டர் பந்தை எடுத்து விட்டதை பார்த்து விட்டனர். விராட் கோலி மீண்டும் தனது இடத்துக்கே ஓடினார்.
பில் சால்ட் திரும்பி ஓட முயன்றார். அப்போது கால் தடுமாறி அவர் கீழே விழுந்து விட்டார். அங்கிருந்து எழுந்து அவர் மீண்டும் க்ரீஸை நோக்கி ஓடுவதற்குள் விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் அவரை ரன் அவுட் செய்து விட்டார். இதை அடுத்து விராட் கோலி தான் அந்த ரன்னை ஓடி இருக்க வேண்டும், பில் சால்ட்டை அவர் ரன் அவுட் செய்துவிட்டார் என விமர்சனம் எழுந்துள்ளது.
ஆனால், நிச்சயமாக அங்கு அந்த ரன்னை ஓடி இருக்க முடியாது என்பதே உண்மை. பில் சால்ட் கீழே விழாமல் வேகமாக திரும்பி ஓடி இருந்தால் ஒருவேளை ரன் அவுட் வாய்ப்பிலிருந்து நூலிழையில் தப்பிக்க வாய்ப்பு இருந்திருக்கலாம். ஆனால், அதுவும் சந்தேகமே, ஏனெனில், அவர் நீண்ட தூரம் ஓடி வந்திருந்தார். அது அவரது தவறான கணிப்பு மட்டுமே.
மேலும், பில் சால்ட் ஓட துவங்கிய அதே நேரத்தில் தான் விராட் கோலியும் ஓட துவங்கினார். பந்து நிச்சயம் ஃபீல்டரை தாண்டி சென்று விடும் என்ற எண்ணத்தில் தான் இருவரும் ஓடினார்கள். எனவே, இந்த ரன்னை ஓடியதில் இருவருக்குமே பங்கு உள்ளது. விராட் கோலி மீது மட்டுமே தவறும் இல்லை என்பதே விமர்சகர்களின் கருத்தாகவும் உள்ளது.
பில் சால்ட் விக்கெட்டை இழந்த பிறகு பெங்களூரு அணியின் விக்கெட் வரிசையாக சரிந்தன. அதனால் அந்த அணியின் ரன் குவிப்பு வேகமும் குறைந்தது. பின்னர் 20 ஓவர்களில் 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. சின்னசாமி மைதானத்தில் 200 ரன்களை எளிதாக சேஸிங் செய்ய முடியும் என்ற நிலையில் 164 என்ற இலக்கை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17.5 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றது. அந்த ரன் அவுட் நடக்காமல் இருந்திருந்தால் பெங்களூர் அணி 200 ரன்களை எடுத்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.