சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேன் மைதானத்திற்கு பதிலாக அடிலெய்டுக்கு மாற்றப்பட்டு டிசம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் டிசம்பர் 4ம் தேதி தொடங்க இருந்த நிலையில், ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ் பவுன்சர் பந்துவீச்சில் படுகாயம் அடைந்து உயிரிழந்ததால் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஹியூக்சின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான மேக்ஸ்வில்லியில் நாளை நடக்கிறது. அவரது மரணத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் உடனடியாகக் களமிறங்க தயக்கம் தெரிவித்த நிலையில், புதிய அட்டவணை விவரத்தை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.
அதன்படி, முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் இருந்து அடிலெய்டுக்கு மாற்றப்பட்டு, டிசம்பர் 9ம் தேதி தொடங்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் பிரிஸ்பேனில் டிசம்பர் 17ம் தேதியும், 3வது டெஸ்ட் மெல்போர்னில் டிசம்பர் 26ம் தேதியும் தொடங்கும். நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 6ம் தேதி சிட்னியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வந்த பிலிப் ஹியூசின், உள்ளூர் மைதானம் அடிலெய்டு என்பது குறிப்பிடத்தக்கது.