கொல்கத்தா: ஐபிஎல் போட்டியின்போது, கொல்கத்தா அணி கேப்டன் கவுதம் கம்பீர் பேட் இரண்டாக உடைத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் போல பரவிவருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான நேற்றைய ஐபிஎல் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் நைடர்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது 2வது பேட் செய்தது கொல்கத்தா. 2வது ஓவரின் முதல் பந்தை வினய்குமார் வீச, கம்பீர் அதை சந்தித்தார்.

முதல் பந்திலேயே வினய்குமாரின் தன்னம்பிக்கையை சிதைக்க வேண்டும் என்று நினைத்த, கம்பீர், பிட்சை விட்டு இறங்கி வந்து அடித்தார். அப்போது பேட்டில் பந்து எந்த இடத்தில் பட்டதோ, அந்த இடம் துண்டாக முறிந்து விழுந்தது. கைப்பிடி மற்றும் அதனோடு எஞ்சிய சிறு பகுதி மட்டுமே கம்பீர் கையில் இருந்தது. கிட்டத்தட், ஒரு குச்சி ஐஸ் கம்பீர் கையில் இருப்பது மாதிரி இருந்தது அதை பார்ப்பதற்கு.
இதனால் பந்து அதிக தூரம் செல்லவில்லை, ரன்னும் ஓடப்படவில்லை. இதையடுத்து வேறு பேட்டை மாற்றி ஆடினார் கம்பீர்.
இந்த பேட்டை எம்.ஆர்.எப் தயாரித்திருந்தது. சச்சினுக்கு பிறகு, கோஹ்லி, கம்பீர் போன்ற வீரர்கள் கைகளில் எம்.ஆர்.எப் அதிகமாக தவழ்கிறது.
இந்த சம்பவத்தை பார்த்ததும், சமூக வலைத்தளமான டிவிட்டரில் அதை நகைச்சுவையாக்கி டிவிட்டுகள் வந்து விழுந்தன.
யுவராஜ்சிங்கும், இதை கேலி செய்ய தவறவில்லை. யுவராஜ் சிங் தனது டிவிட்டரில், "இப்போது பேட் கம்பீர் சைசுக்கு வந்துவிட்டது" என்று கூறியுள்ளார் (டபுள் மீனிங் ஏதுமில்லை). கம்பீர் குட்டையானவர் என்பதை யூவி இவவ்வாறு கூறியுள்ளார்.
சச்சின் போன பிறகு எம்.ஆர்.எப் நிறுவனம், கிரிக்கெட் மீது ஆர்வம் காட்டவில்லை என்றும், இந்திய வேக பந்து வீச்சாளர் வீசிய பந்தில், எம்.ஆர்.எப் பேட் உடைந்துள்ளது உண்மையிலேயே அந்த நிறுவனத்திற்கு புகழை தந்துள்ளது. ஏனெனில், எம்.ஆர்.எப் சென்னையில் வேகப் பந்து பயிற்சி மையம் நடத்துகிறது என்றும் டிவிட் செய்திருந்தனர் சில ரசிகர்கள்.
இம்சை அரசன் படத்தில், இப்படித்தான் மனோபாலா கதாப்பாத்திரம், செய்து கொடுத்த வாளை வடிவேலு கதாபாத்திரம் இரண்டாக உடைக்கும் காட்சி கலகலப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.