மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளராக விளங்கிய பியூஷ் சாவ்லா, தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான அவர், இந்திய அணிக்காக இரண்டு உலக கோப்பையை வென்று இருக்கின்றார்.
இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," 20 ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடி வருகின்றேன். தற்போது இந்த அழகான விளையாட்டுக்கு பிரியா விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. நான் கிரிக்கெட்டில் இருந்து விலகினாலும் கிரிக்கெட் எனக்குள் எப்போதுமே வாழும்."

"தற்போது நான் புதிய பயணத்தை எதிர்நோக்கி இருக்கின்றேன். கிரிக்கெட் கத்துக் கொடுத்த பாடம் என்னுள் எப்போதுமே இருக்கும். இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டுகளில் விளையாடியது. 2007 டி20 உலக கோப்பை, 2011 50 உலகக் கோப்பை வென்றது போன்ற ஒவ்வொரு தருணமும் எனக்கு கிடைத்த ஆசீர்வாதங்கள் ஆக தான் நான் நினைக்கின்றேன்."
"இந்த அழகான நினைவுகள் என்னுடைய இதயத்தில் எப்போதுமே இருக்கும். எனக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள். என் மீது நம்பிக்கை வைத்து ஏலத்தில் எடுத்த பஞ்சாப் கிங்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சிஎஸ்கே,மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். ஐபிஎல் என் வாழ்க்கையில் ஒரு ஸ்பெஷலான அத்தியாயமாக இருந்தது."
" ஐபிஎல் தொடரில் விளையாடியது என் வாழ்நாளில் மறக்க முடியாதது. இந்த நேரத்தில் எனக்கு பயிற்சி அளித்த ஸ்ரீ கே கே கௌதம் மற்றும் மறைந்த ஸ்ரீ வெங்கட் சரஸ்வத் ஆகியோருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்கள் தான் நான் இன்று சிறந்து விளங்கியதற்கு காரணம். என்னை வடிவமைத்தது இந்த இருவரும் தான்."
"இன்று எனக்கு மிகவும் உணர்ச்சிவசமான நாள். ஏனென்றால் அனைத்து விதமான போட்டிகளில் இருந்து நான் விலகும் முடிவை இன்று தான் எடுத்தேன். மறைந்த என்னுடைய தந்தைக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அவர் இல்லாமல் இந்த சிறந்த பயணத்தை என்னால் மேற்கொண்டு இருக்க முடியாது" என்று பியூஷ் சாவ்லா உருக்கமாக தெரிவித்து இருக்கின்றார்.
15 வயதில் தொழில் முறை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி, அண்டர் 22 உத்தர பிரதேசம் அணியிலும் சாவ்லா விளையாடி இருக்கிறார். சேலஞ்சர்ஸ் தொடர் 2005 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக அவர் பந்து வீசி அவருடைய விக்கெட்டை வீழ்த்தியது அப்போது மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.17 வயதில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய சாவ்லா உள்நாட்டு கிரிக்கெட்டில் அனைத்து வடிவமான போட்டிகளிலும் சேர்த்து ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றார்.
சாவ்லா இந்திய அணிக்காக மூன்று டெஸ்ட் ,25 ஒருநாள் மற்றும் 7 t20 போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளை மொத்தமாக கைப்பற்றி இருக்கிறார். 2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு பியூஷ் சால்வா முக்கிய காரணமாக இருந்துள்ளார்.